செய்திகள்

பெருவெள்ளம் ஏற்பட காரணம் என்ன? - கேரள அரசின் குற்றச்சாட்டிற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல்

Published On 2018-08-24 06:22 GMT   |   Update On 2018-08-24 06:22 GMT
முல்லைப்பெரியாறு அணையை திடீரென திறந்ததே வெள்ளத்திற்குக் காரணம் என்ற கேரள அரசின் குற்றச்சாட்டிற்கு தமிழக அரசு இன்று எழுத்துப்பூர்வ பதில் மனுவை தாக்கல் செய்தது. #KeralaFloods #TamilNaduReply #MullaperiyarDam
புதுடெல்லி:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கேரள அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திடீரென அதிக அளவில் தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டதும் வெள்ள சேதம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் என்று கூறியிருந்தது.

அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய உடனேயே கொஞ்சம் கொஞ்சமாக  தண்ணீரை திறந்து விட்டிருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்காது என்றும் கேரளா தனது மனுவில் கூறியிருந்தது.

இந்த குற்றச்சட்டுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அரசு இன்று எழுத்துப்பூர்வ மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஆகஸ்ட் 14ம் தேதி முதல் முதல் 19ம் தேதி வரை இடுக்கி, இடைமலை அணைகளில் இருந்து 36.28 தண்ணீர் டிஎம்சி திறக்கப்பட்டதே கேரளாவில் வெள்ளம் ஏற்பட காரணம்.



ஆகஸ்ட் 15-ம் தேதி முல்லைப் பெரியாறு அணை 140 அடியை எட்டியபோது, அணையில் இருந்து இடுக்கி அணைக்கு 1.24 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் அன்று கேரள அரசு இடுக்கி அணையில் இருந்து 13.79 டிஎம்சி திறந்துவிட்டது. ஆகஸ்ட் 16-ல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 2 டிஎம்சி திறக்கப்பட்டது. ஆனால் கேரளா இடுக்கி அணையில் இருந்து 4.47 டிஎம்சி திறந்துவிட்டது. எனவே, கேரள வெள்ளப் பெருக்கிற்கு தமிழகம் காரணம் என்று குற்றம்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #KeralaFloods #TamilNaduReply #MullaperiyarDam
Tags:    

Similar News