செய்திகள்

கேரளாவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

Published On 2018-08-11 18:37 GMT   |   Update On 2018-08-11 18:37 GMT
கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. #KeralaRain #KeralaFloods #IdukkiDam
திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது.

இதனால் கேரளாவில் உள்ள அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. விவசாய பயிர்களும் மழையால் நாசமடைந்துள்ளது.

முழு கொள்ளளவை எட்டியுள்ள இடுக்கி அணை 26 வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மீட்புப் பணிக்காக பேரிடர் மீட்பு குழு, ராணுவம் மற்றும் கப்பற்படை வீரர்கள் கேரளா விரைந்துள்ளனர்.

இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளை கேரளா முதல் மந்திரி பினராய் விஜயன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சென்னிதலா உள்பட பலர் பார்வையிட்டனர்.

இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு பகுதியில் வெள்ளத்தில் சிக்கி பலியான தாய் மற்றும் மகளின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், வெள்ளத்தில் பலியான 4 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

இதையடுத்து, கேரளாவில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #KeralaRain #KeralaFloods #IdukkiDam
Tags:    

Similar News