செய்திகள்
மாநிலங்களவையில் காங். குறித்த பிரதமர் மோடியின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்
மாநிலங்களவையில் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்தை சபாநாயகர் வெங்கையா நாயுடு அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளார். #PMModi #MonsoonSession #RajyaSabha
புதுடெல்லி:
மாநிலங்களவை துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ஹரிவனாஷ் 20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அது தொடர்பாக அவையில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.
இதற்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் ஹரிபிரசாத் எம்.பி சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் முறையிட்டார். உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இத்தகைய தரம் தாழ்ந்த கருத்துக்களை தெரிவிப்பது அழகல்ல என ஹரி பிரச்சாத் குறிப்பிட்டிருந்தார்.
ஹரி பிரசாத்தின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் வெங்கைய நாயுடு, பிரதமர் மோடியின் அந்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.
பாராளுமன்றத்தில் பிரதமரின் கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது அரிதான நிகழ்வாகும்.