செய்திகள்
கேரளாவில் கனமழை பாதிப்புகளை 12-ம் தேதி பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங்
கேரளாவில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 12-ம் தேதி பார்வையிட உள்ளார். #KeralaFloods #KeralaRain #RajnathSingh
சென்னை:
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.
இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 28-பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கனமழை பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்நிலையில், வரும் 12-ம் தேதி கேரளா செல்ல உள்ள ராஜ்நாத் சிங், மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார்.
பின்னர், அம்மாநில முதல்வர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மீட்பு பணிகள் குறித்து கேட்டறிய உள்ளார்.