செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேரளா வந்தடைந்தார்
மூன்றுநாள் அரசுமுறை பயணமாக கேரளா வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் அன்புடன் வரவேற்றனர். #ramnathkovind #pinarayivijayan
திருவனந்தபுரம்:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேரள மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்றுநாள் அரசுமுறை பயணமாக ராணுவ விமானத்தில் இன்று திருவனந்தபுரம் வந்தடைந்தார்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கேரள கவர்னர் சதாசிவம், முதல் மந்திரி பினராயி விஜயன் அன்புடன் வரவேற்றனர்.
சட்டமன்ற சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்டோர் மலர்செண்டுகளை அளித்து அன்புடன் வரவேற்றனர். அங்கிருந்து விடைபெற்று கவர்னர் மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி இன்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை காலை நடைபெற உள்ள கேரள மாநில சட்டமன்ற வைர விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், வைரவிழா கொண்டாட்டங்களின் நிறைவை குறிக்கும் வகையில் ‘ஜனநாயக திருவிழா’வை தொடங்கி வைக்கிறார்.
இவ்விழாவில் மாநில ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
பின்னர் 2 நாட்கள் நடைபெறும் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்று தலைமையுரை ஆற்றுகிறார். ‘சுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான அதிகாரங்களை பெறுவதில் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 7-ம் தேதி திரிச்சூரில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார். குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யும் ஜனாதிபதி அன்றிரவு டெல்லி திரும்புகிறார். #ramnathkovind #pinarayivijayan