செய்திகள்
மலேசியாவில் கடத்தப்பட்ட இந்தியர் பத்திரமாக மீட்பு - சுஷ்மா சுவராஜ்
மலேசியா நாட்டில் கடத்தப்பட்ட இந்தியர் சஞ்சீவ் பத்திரமாக மீட்கப்பட்டார் என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj
புதுடெல்லி:
மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சீவ். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வந்தார். கடந்த 28ம் தேதி மர்ம நபர்கள் சிலர் இவரை கடத்தி சென்றனர்.
இதுகுறித்து அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் கிடைத்த்து. வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜும் தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இந்நிலையில், கடத்தப்பட்ட சஞ்சீவ் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் தொடர்புடைய 3 பாகிஸ்தானியர்களை மடக்கிப் பிடித்தனர். இதுதொடர்பாக, சுஷ்மா சுவராஜுக்கும் தகவல் கொடுத்தனர்.
கடத்தப்பட்ட இந்தியர் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு சுஷ்மா சுவராஜ் தூதரக அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
தகவலறிந்து மத்திய பிரதேசம் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், சுஷ்மா சுவராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதில், இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் மற்றும் மலேசியன் ஹை கமிஷன் மற்றும் மலேசிய போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பையே முக்கிய அம்சமாக கொண்டு சுஷ்மா சுவராஜ் செயல்பட்டு வருகிறார் என டுவிட்டரில் பாராட்டியுள்ளார். #SushmaSwaraj