செய்திகள்
உ.பி.யில் கனமழையில் சிக்கி 30 பேர் பலி
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெய்த கனமழையில் சிக்கி இதுவரை 30 பேர் பரிதாபமாக பலியாகினர். #UPHeavyRain
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மழை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து, மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளக் காடானது.
வீடுகள் இடிந்தும், இடி, மின்னல் தாக்கியும் ஆக்ராவில் 5 பேரும், மெயின்புரியில் 4 பேரும், முசாபர் நகர், கஸ்கஞ்ச் பகுதிகளில் 3 பேரும், மீரட், பெரெய்லியில் 2 பேரும், கான்பூர், மதுரா, காசியாபாத், ரே பரேலி உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவரும் என மொத்தம் 30 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 10-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுராவில் அதிகபட்சமாக 19 செ.மீ. மழை பதிவானது. இந்த கனமழை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் முடுக்கி விட்டுள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், வீடு இழந்தவர்களை நிவாரண முகாம்களில் தங்கவைக்கவும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.