செய்திகள்

‘வாட்ஸ்அப்’பில் வதந்தி - குரூப் அட்மினுக்கு பதில் 5 மாதங்கள் சிறையில் தவித்த கல்லூரி மாணவர்

Published On 2018-07-23 05:37 GMT   |   Update On 2018-07-23 06:15 GMT
‘வாட்ஸ்அப்’பில் போலி வதந்தி பரப்பிய அட்மினை கைது செய்வதற்கு பதிலாக குரூப்பில் உள்ள கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு 5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். #Whatsapp
போபால்:

மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள டேலன் நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜூனைத் கான் (20). இவர் ராஜ்கரில் பி.எஸ்சி. படித்து வருகிறார்.

இந்த நிலையில் வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பியதாக அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது ‘ஐ.டி.’ சட்டப்பிரிவு மற்றும் இ.பி.கோ.124ஏ (கலவரம் ஏற்படுத்த முயற்சித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் சிறையில் அடைக்கப்பட்ட அவரால் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. அவரது குடும்பத்தினர் கோர்ட்டில் ஜாமீன் பெற முயற்சி செய்தனர். ஆனால் கிடைக்கவில்லை. எனவே, அவரால் தேர்வு எழுத முடியவில்லை.


கடந்த 5 மாதங்களாக சிறையில் தவித்து வருகிறார். அவரை வெளியே கொண்டு வர முதல்-அமைச்சர் உதவி மையம் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் என பலரை குடும்பத்தினர் சந்தித்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதற்கிடையே ஜுனைத் கான் ‘வாட்ஸ் அப்’ குழுவில் ‘அட்மின்’ ஆக இல்லை. அதில் அவர் உறுப்பினராக இருந்தார். தவறுதலாக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் ‘வாட்ஸ்-அப்’ வதந்தி பரவியபோது ஜுனைத்கான் ஊரில் இல்லை. ‘ரேட்லம்‘ என்ற இடத்தில் இருந்தார். எனவே இச்சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இல்லை. ஆகவே அவரை விடுவிக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வழக்கில் இர்பான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். #Whatsapp
Tags:    

Similar News