செய்திகள்

ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி - தீர்மானிக்கும் முடிவை சுப்ரீம் கோர்ட்டிடம் ஒப்படைத்த மத்திய அரசு

Published On 2018-07-11 08:17 GMT   |   Update On 2018-07-11 08:17 GMT
ஓரினச் சேர்க்கையை குற்றமாக குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பின் 377-வது சட்டப்பிரிவு விவாகரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் முடிவை ஏற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 377-வது பிரிவில் ‘இயற்கை நியதிக்கு மாறாக ஒரு ஆணோடோ, பெண்ணோடோ, பிராணிகளுடனோ உடலுறவில் ஈடுபடுவது ஆயுள் தண்டனைக்குரிய குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லது, அபராதத்துடன்  கூடிய  பத்தாண்டு தண்டனைக்கு இந்த சட்டப்பிரிவு பரிந்துரைக்கிறது.

உலகில் பல நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தம்பதியராக திருமணம் செய்துகொண்டு வாழும் நிலையில் இந்த சட்டப்பிரிவை நீக்ககோரி டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஓரினச்சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக கருதி நடவடிக்கை எடுப்பது தவறு என கடந்த 2009-ம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக "இயற்கைக்கு மாறான எந்த உறவும் சட்டவிரோதம்" என உத்தரவிட்டது. இதனால், தண்டனைக்குரிய 377-வது சட்டப்பிரிவு மீண்டும் உயிர் பெற்றது.

இதற்கு பல்வேறு அமைப்புகளும், ஓரின சேர்க்கையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக மறுபரிசீலனை செய்யும்படியும், 377 சட்டப்பிரிவை நீக்கும் படியும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கில் இன்று ஆஜரான மத்திய அரசின் சார்பில்  கூடுதல் தலைமை வழக்கறிஞர்  துஷார் மேத்தா, இவ்விவகாரம் தொடர்பாக முடிவு செய்யும் பொறுப்பை நீதிபதிகளின் ஞானத்திற்கே விட்டுவிடுவதாக தெரிவித்துள்ளார். #wisdomofSC #validityofSection377 #Section377
Tags:    

Similar News