செய்திகள்
சட்டசபையில் கதறி அழுது பரபரப்பை ஏற்படுத்திய பாஜக பெண் எம்.எல்.ஏ
மத்தியப் பிரதேசம் மாநில சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ நீலம் அபய் மிஷ்ரா, சொந்த கட்சியின் முக்கிய தலைவர் தன்னை துன்புறுத்துவதாக கூறி கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபால்:
மத்தியப் பிரதேசம் மாநிலம் சிமாரியா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நீலம் அபய் மிஷ்ரா. பாஜகவை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வான இவர் இன்று சட்டசபை கூட்டத்தின் பூஜ்ஜிய நேரத்தின் போது, எழுந்து நின்று, தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் கட்சியின் முக்கிய தலைவர் துன்புறுத்தல் கொடுப்பதாகவும், மிரட்டல் விடுவதாகவும் பேசினார்.
திடீரென அவர் கதறி அழ தொடங்கினார். இதனை அடுத்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அபய் மிஷ்ராவுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். பெண் எம்.எல்.ஏ.வுக்கு மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை என்றால், பொதுமக்களின் நிலை என்ன? என காங்கிரஸ் உறுப்பினர் கேள்வி எழுப்பினர்.
இதனை அடுத்து பேசிய, உள்துறை மந்திரி அபய் மிஷ்ராவின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தார். சில பெண் எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆறுதல் கூறியதை அடுத்து, அபய் மிஷ்ரா இயல்பு நிலைக்கு திரும்பினார். இந்த சம்பவத்தால் அவை சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.