செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் 17-ம் தேதி நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம்

Published On 2018-06-15 13:20 GMT   |   Update On 2018-06-16 12:56 GMT
நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் 17-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. #NITIAayog #pmmodi
புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டது.

மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் பெயரில் கடந்த 1-1-2015 அன்று உருவாக்கப்பட்ட புதிய அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், துணை தலைவராக ராஜிவ் குமார் என்பவரும் செயல்பட்டு வருகின்றனர். 

மாநில அரசின் பங்களிப்புடன் நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக விவாதித்து, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வது உள்ளிட்டவை இந்த அமைப்பின் முக்கிய அம்சமாக உள்ளது.

இந்த நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் 17-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி மாலைவரை நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள், மாநில முதல் மந்திரிகள், யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள் மற்றும் மத்திய அரசின் முக்கிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஆயுஷ்மன் பாரத், தேசிய சத்துணவு திட்டம், இந்திரதனுஷ், மாவட்டங்களின் வளர்ச்சி மற்றும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது போன்ற விவகாரங்கள் இந்த கூட்டத்தின்போது விவாதிக்கப்படும் என தெரியவந்துள்ளது. #NITIAayog #pmmodi
Tags:    

Similar News