செய்திகள்

போலீஸ் காவலில் இறந்தவர் மனைவிக்கு அரசு வேலை- ரூ.10 லட்சம் நிவாரண நிதியும் வழங்கப்பட்டது

Published On 2018-05-18 05:45 GMT   |   Update On 2018-05-18 05:45 GMT
கேரளாவில் போலீஸ் காவலில் மரணம் அடைந்த வாலிபரின் மனைவிக்கு அரசு வேலையும் ரூ.10 லட்சம் மாநில அரசின் நிதியும் வழங்கப்பட்டுள்ளது.#Sreejith #custodialdeath #governmentjob #wife #chiefminister #kerala
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பரவூர் வராப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித். இவரது மனைவி அகிலா(வயது26).

அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு வியாபாரியை தற்கொலைக்கு தூண்டியதாக ஸ்ரீஜித்தை கைது செய்து அவர் மீது வராப்புழா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீஸ் காவலில் அவரிடம் விசாரணை நடந்த போது ஸ்ரீஜித்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீஜித் இறந்து விட்டார். போலீசார் ஸ்ரீஜித் மீது பொய் வழக்கு பதிவு செய்து விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொன்று விட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் செய்தனர்.

இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரை கண்டித்து எதிர் கட்சியினர் போராட்டமும் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து கேரள அரசு ஐ.ஜி. மட்டத்தில் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டது.

அதன்படி நடந்த விசாரணையைத் தொடர்ந்து ஒரு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.



போலீஸ் காவலில் மரணம் அடைந்த வாலிபர் ஸ்ரீஜித் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளை அரசு செய்யும் என்று கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது ஸ்ரீஜித்தின் மனைவிக்கு பரவூர் தாலுகா அலுவலகத்தில் கிளார்க் வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.10 லட்சம் மாநில அரசின் நிதியும் வழங்கப்பட்டது. எர்ணாகுளம் கலெக்டர் முகமது சபீருல்லா, ஸ்ரீஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது மனைவி அகிலாவிடம் வேலைக்கான உத்தரவையும், ரூ.10 லட்சம் நிதிக்கான காசோலையையும் வழங்கினார்.#Sreejith #custodialdeath #governmentjob #wife #chiefminister #kerala
Tags:    

Similar News