செய்திகள்

ஆற்றுப்படுகையில் மணல் அள்ள தடை கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

Published On 2018-05-03 21:56 GMT   |   Update On 2018-05-03 21:56 GMT
காவிரி, கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் மணல் அள்ள தடை விதிக்க கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்புமாறு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, ஒரு சில நிபந்தனைகளை விதித்து அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் மணல் அள்ளலாம் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மகாதேவன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், சஞ்சய் கிஷண் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனு மீதான தங்களது பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை மற்றொரு வழக்கில் தமிழகத்தில் மணல் குவாரிகளை 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை விதித்து இருப்பது நினைவுகூரத்தக்கது. 
Tags:    

Similar News