செய்திகள்

அன்னா ஹசாரேயின் தொடர் உண்ணாவிரதம் வாபஸ்

Published On 2018-03-29 13:12 GMT   |   Update On 2018-03-29 13:12 GMT
லோக்பால், லோக் ஆயுக்தா, விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றில் மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரே இன்று தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார். #AnnaHazare
புதுடெல்லி:

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் வகையில் ஜன் லோக்பால் அமைப்பை கொண்டுவர வேண்டும். விவசாயிகளின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.

ஜன் லோக்பால் அமைப்பு விரைவில் கொண்டு வரப்படும் என அப்போதைய மத்திய அரசு உறுதி அளித்ததால் அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். ஆனால் மத்திய அரசு ஜன் லோக்பால் அமைப்பை கொண்டு வரவில்லை.

அதன்பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக ஜன் லோக்பால் அமைப்பை கொண்டு வருவோம்’’ என பா.ஜ.க. உறுதியளித்தது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஜன் லோக்பால் அமைப்பை கொண்டு வரவில்லை.

இதற்கிடையே, லோக்பால், லோக் ஆயுக்தா, விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றில் மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மார்ச் 23-ம் தேதி முதல் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரே இன்று தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அன்னா ஹசாரேவை மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய வேளாண் துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் சந்தித்தனர். அவரது கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலனை செய்யும் என மத்திய அரசின் சார்பில் உறுதி அளித்தனர்.

இதையடுத்து, அவர்களது உறுதி மொழியை ஏற்று அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றார். தேவேந்திர பட்னாவிஸ் கொடுத்த பழச்சாறை அருந்தி தனது போராட்டத்தை திரும்ப பெற்றார். #AnnaHazare #Tamilnews
Tags:    

Similar News