செய்திகள்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு- டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் மனு

Published On 2018-03-23 13:13 GMT   |   Update On 2018-03-23 14:09 GMT
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். #kartichidambaram #AircelMaxiscase
புதுடெல்லி:

ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்தபோது, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக, கார்த்தி சிதம்பரத்தின் பினாமி நிறுவனமாக கருதப்படும்  அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் நிறுவனம் உதவி செய்து, பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச்  சட்ட ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட உத்தரவு அறிக்கையில், ஏர்செல்-மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ளது. 

ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் கார்த்திக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ள நிலையில், அவரை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யலாம் என பரபரப்பாக பேசப்பட்டது. 

இதையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews #kartichidambaram # AircelMaxiscase
Tags:    

Similar News