செய்திகள்

மத்திய அரசை காப்பாற்ற அ.தி.மு.க அவையை முடக்குகிறதா? சமாஜ்வாடி பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2018-03-19 10:14 GMT   |   Update On 2018-03-19 10:14 GMT
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்பதற்காகவே அ.தி.மு.க அவையை முடக்குகிறது என சமாஜ்வாதி எம்.பி ராம்கோபால் யாதவ் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

கடந்த 5-ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தொடர் கடும் அமளியால் 11 நாட்களும் முடங்கியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுகின்றனர். ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து விவகாரத்தில் ஆந்திர மாநில எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுகின்றனர். 

இதற்கிடையே, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்திருந்தன. ஆனால், அவை சுமூகமாக நடக்காத நிலையில், இந்த நோட்டீஸை விவாதிக்க முடியாது என சபாநாயகர் மறுத்துவிட்டார்.


எம்.பி ராம்கோபால் யாதவ்

இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்பதற்காகவே அ.தி.மு.க. எம்.பி.க்கள் அவையை முடக்குவதாக சமாஜ்வாடி கட்சி எம்.பி ராம்கோபால் யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மத்திய அரசின் கட்டளைக்கு ஏற்ப அ.தி.மு.க அவையை முடக்குவதாகவும், மத்திய அரசை காப்பாற்ற அ.தி.மு.க. நாடகமாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை அ.தி.மு.க மறுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வாக்குறுதி அளிக்கப்படும் வரை அவையை நடத்த விட மாட்டோம் என அ.தி.மு.க எம்.பி.க்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். #BudgetSesion #TamilNews
Tags:    

Similar News