செய்திகள்

பா.ஜ.க., காங்கிரசுக்கு எதிராக மம்தா தலைமையில் மூன்றாவது அணி - ராம்ஜெத்மலானி வலியுறுத்தல்

Published On 2018-03-18 14:25 GMT   |   Update On 2018-03-18 14:25 GMT
இந்தூரில் பேசிய முன்னாள் சட்ட மந்திரி ராம்ஜெத் மலானி, பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு எதிராக மம்தா தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். #ramjethmalani #mamatabanarjee
போபால்:

தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா மாநில முதல் மந்திரியுமான சந்திரசேகர ராவ், தேசிய அளவில் பெரிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக பலம்மிக்க மூன்றாவது அணி அமைக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த யோசனைக்கு ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாத்துல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே, நாளை கொல்கத்தா நகருக்கு செல்லும் சந்திரசேகர ராவ், மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து மூன்றாவது அணி தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில்,  முன்னாள் சட்ட மந்திரி ராம்ஜெத்மலானி கூறுகையில், பா.ஜ.க.  காங்கிரசுக்கு எதிராக மம்தா தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இந்தூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அரசுகள் கருப்பு பணத்தை ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கொண்டு வருவதில் தோல்வி அடைந்துவிட்டன. 

அவர்கள் இருவரும் சேர்ந்து மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். எனவே, நேர்மையான தலைவர்களை கொண்டு மூன்றாவது அணி அமைய வேண்டும்.  

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும். மம்தா பிரதமர் ஆவதற்கு தகுதியானவர். #ramjethmalani #mamatabanarjee #Tamilnews
Tags:    

Similar News