search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூன்றாவது அணி"

    3-வது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவை ஏற்க தயார் என்று சந்திரசேகர ராவ் கட்சி அறிவித்துள்ளது.

    ஐதராபாத்:

    மத்தியில் அடுத்து பாரதிய ஜனதா, காங்கிரஸ் அல்லாத புதிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரும், தெலுங்கானா மாநில முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் கூறி வந்தார்.

    அவரது இந்த முடிவில் நேற்று திடீரென மாற்றம் ஏற்பட்டது. மத்தியில் புதிய ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தால் அதை ஏற்க தயார் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபித்ரசூல்கான் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:-

    மாநில கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, “கூட்டாட்சி முன்னணி” உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார். அவரை எங்கள் கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் அடுத்த வாரம் சந்தித்து பேச உள்ளார்.

    மத்தியில் அடுத்து மாநில கட்சிகளின் கூட்டாட்சி முன்னணிதான் ஆட்சியை பிடிக்கும். ஒரு வேளை மத்தியில் அரசமைக்க எங்களுக்கு போதிய எம்.பி.க்கள் பலம் இல்லாமல் போகும் பட்சத்தில் காங்கிரசின் உதவியை நாடுவோம். காங்கிரஸ் கட்சி எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் ஏற்றுக் கொள்வோம்.

     


    காங்கிரஸ் அளிக்கும் ஆதரவு வெளியில் இருந்து தான் இருக்கும். எங்கள் அரசில் காங்கிரஸ் பங்கு பெறாது. காங்கிரசுக்கு எந்த ஒருஅதிகாரத்தையும் நாங்கள் கொடுக்க மாட்டோம்.

    ஆட்சி, அதிகாரத்தை நடத்தும் டிரைவர் சீட்டில் மாநில கட்சிகள்தான் இருக்கும். எனவே காங்கிரஸ் ஆதரவு கொடுத்தாலும் புதிய அரசு கூட்டாட்சி முன்னணியின் அரசாகத் தான் இருக்கும்.

    அதுபோல பிரதமர் பதவியையும் நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம். கூட்டாட்சி முன்னணியில் உள்ள மாநில கட்சிகளின் தலைவர்களில் யாராவது ஒருவர்தான் புதிய பிரதமராக பதவி ஏற்பார். நாங்கள் அதுபற்றி ஆலோசித்து ஒருமித்த அடிப்படையில் புதிய பிரதமரை தேர்ந்து எடுப்போம்.

    காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது போல பாரதிய ஜனதா ஆதரவு கொடுக்க முன் வந்தால் ஒரு போதும் ஏற்க மாட்டோம். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேருவதை நாங்கள் விரும்பவில்லை.

    மேலும் மத்தியில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க உதவிகள் எதுவும் செய்ய மாட்டோம். மாநில கட்சித் தலைவர்கள் அனைவரும் இதில் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம்.

    பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சி 100 இடங்களுக்குள் தான் வெற்றி பெறும்.

    எனவே கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு ஆதரவு கொடுத்து இருப்பது போல மத்தியில் எங்களை ஆதரிப்பதை தவிர காங்கிரஸ் கட்சிக்கு வேறு வழி இல்லை. இடது சாரி கட்சிகளும், கூட்டாட்சி முன்னணிக்கு ஆதரவாக உள்ளனர்.

    எனவே மத்தியில் கூட்டாட்சி முன்னணி ஆட்சி மலரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    ஸ்ரீரங்கம்:

    தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் நேற்றிரவு தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திருச்சி சங்கம் ஓட்டலுக்கு சென்றார்.

    இரவு அங்கு தங்கி ஓய்வு எடுத்த அவர், இன்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் மூலவர் சன்னதி, தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு சென்று வழிபட்டார். அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பட்டாச்சாரியார்கள் சந்திரசேகர ராவ்க்கு பிரசாதம் வழங்கினர்.

    இதையடுத்து அவர் பேட்டரி கார் மூலம், கோவில் உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். அவருடன் கோவில் நிர்வாக அதிகாரிகள் சென்றனர்.

    பேட்டரி காரில் சந்திரசேகரராவ் ஸ்ரீரங்கம் கோவிலை வலம் வந்த காட்சி.

    சுவாமி தரிசனம் முடிந்ததும் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர், கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். இன்று மாலை அவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.

    சந்திரசேகரராவ் வருகையையொட்டி ஸ்ரீரங்கம் கோவில், அவர் தங்கியிருந்த சங்கம் ஓட்டல், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தெலுங்கானா போலீசாரும் பாதுகாப்புக்காக வந்திருந்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கோவிலில் சந்திரசேகர ராவ் சாமி தரிசனம் செய்தார். பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அவர் கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் மீண்டும் தீவிரம் காட்டிவருகிறார். சென்னையில் இன்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் 6-வது கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. கடைசி கட்ட தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

    23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பா.ஜனதா மீண்டும் ஆட்சி கட்டிலில் அமருமா? இல்லை அதற்கு மாற்றாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமையுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

    இந்த தேர்தலில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் தனித்து போட்டியிட்டுள்ளன. அந்த வகையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி உள்ளார்.

    தேர்தலுக்கு முன்பே இது தொடர்பான முயற்சிகளில் அவர் வேகம் காட்டினார். சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கடந்த சில மாதங்களுக்கு முன்பே சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார். ஆனால் தேர்தலுக்கு முன்னர் 3-வது அணி முழுமை அடையவில்லை.


    இந்த நிலையில் தெலுங்கானா முதல்வரான சந்திரசேகர ராவ் 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் மீண்டும் தீவிரம் காட்டிவருகிறார். சென்னையில் இன்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பே சந்திரசேகர ராவ் மு.க.ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால் சந்திப்பு நடைபெறவில்லை.

    மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக திருச்சியில் இருந்து தனி விமானத்தில் சந்திரசேகர ராவ் இன்று சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு செல்லும் அவர் மாலை 4.30 மணி அளவில் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் அனைத்து மாநிலங்களிலும் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க முடியவில்லை. இதனால் மம்தா பானர்ஜி, மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும் தனித்தே களம் இறங்கி உள்ளனர். இப்படி பல மாநிலங்களில் மாநில கட்சிகளை பா.ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைக்க காங்கிரஸ் தவறிவிட்டதாகவே குற்றச்சாட்டு உள்ளது.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்து இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மோடி மீண்டும் பிரதமர் ஆனால் அதற்கு ராகுல்காந்தியே முழுபொறுப்பு என்று கூறி இருந்தார். இப்படி பிரிந்து நிற்கும் மாநில கட்சிகள் தேர்தலுக்கு பிறகு 3-வது அணியை உருவாக்கி பா.ஜனதா, காங்கிரஸ் இல்லாத புதிய அரசை அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த 3-வது அணிக்கு வலுசேர்ப்பதற்காகவே சந்திரசேகர ராவ் காய் நகர்த்தி வருகிறார். இதற்கான முயற்சியாகவே மு.க.ஸ்டாலினுடனான இந்த சந்திப்பு என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மு.க.ஸ்டாலின், சந்திரசேகர ராவ் இருவரும் தங்களது சந்திப்பின்போது தேர்தலுக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கிறார்கள். 3-வது அணி பற்றியும் ஆலோசிக்கிறார்கள். மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு சந்திரசேகர ராவ் மேலும் பல தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றுள்ளது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் ஏற்கனவே முன்மொழிந்துள்ளார். எனவே காங்கிரஸ் அல்லாத 3-வது அணியில் தி.மு.க. இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

    இதனால் இன்றைய இருவரது சந்திப்பும் மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
    ×