செய்திகள்
லோக் ஆயுக்தா அலுவலகத்தில் நீதிபதிக்கு கத்திக்குத்து - பெங்களூரில் பரபரப்பு
கர்நாடக மாநிலம் பெங்களூர் லோக் ஆயுக்தா அலுவலகத்தில் நீதிபதி விஷ்வான்ந்த் ஷெட்டியை மர்மநபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் லோக் ஆயுக்தா அலுவலகம் அமைந்துள்ளது. இன்று பிற்பகலில் நீதிபதி விஷ்வான்ந்த் ஷெட்டி தனது அறையில் வழக்கமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில், அறைக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர் நீதிபதி ஷெட்டியை மூன்று மூறை கத்தியால் குத்தினார்.
இதில் நிலை குலைந்த நீதிபதி கீழே சரிந்து விழுந்து மயக்கமானார். இதனை அடுத்து, அங்கு இருந்தவர்கள் மர்மநபரை கையும் களவுமாக பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். மல்லையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நீதிபதி ஷெட்டியை அம்மாநில முதல்வர் சித்தராமையை சந்தித்து நலம் விசாரித்தார்.
கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் கட்டிட காண்டிராக்டர் என்றும் டெண்டர் விவகாரத்தில் நீதிபதி வழங்கிய தீர்ப்பால் ஆத்திரமடைந்த அவர் இன்று தாக்கியுள்ளதாக அம்மாநில உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார். அலுவலகத்தில் புகுந்து நீதிபதியை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.