செய்திகள்
உத்தரப்பிரதேசத்தின் ஒவ்வொரு கிராமத்தையும் ஜியோ இணைக்கும் - முகேஷ் அம்பானி
உத்தரப்பிரதேசத்தின் ஒவ்வொரு கிராமத்தையும் ஜியோ இணைக்கும் எனவும், 10 ஆயிரம் கோடி ரூபாய் இதற்காக முதலீடு செய்யப்பட உள்ளதாக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். #UPInvestorsSummit
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கும் நோக்கிலும், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கிலும் முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, லக்னோ நகரில் இன்று இரண்டு நாட்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மாநில கவர்னர் ராம்நாயக், முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் மந்திரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு நாட்டில் இருந்து வந்த பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முகேஷ் அம்பானி, 22 கோடி மக்களை கொண்ட உத்தரப்பிரதேசம் எழுச்சி பெறாமல் இந்தியா எழுச்சி பெறாது என தெரிவித்தார். மேலும், “எல்லா கிராமங்களையும் ஜியோ 4ஜி இணைக்கும். இதற்காக அடுத்த மூன்றாண்டுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது” என தெரிவித்தார்.
கங்கை நதியை தூய்மை செய்யும் திட்டத்திற்கு தனது ரிலையன்ஸ் நிறுவனம் தேவையான உதவிகளை செய்யும் எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். #UPInvestorsSummit #Jio4G #TamilNews