செய்திகள்

விஜயதரணி மீது நடவடிக்கை இல்லை - திருநாவுக்கரசர் பேட்டி

Published On 2018-02-21 03:25 GMT   |   Update On 2018-02-21 03:25 GMT
சட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்பு விவகாரத்தில் கருத்து தெரிவித்த விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
புதுடெல்லி:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று டெல்லி சென்றார். அங்கு காங்கிரஸ் அலுவலகத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு 700 பேர் தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். இன்னும் நியமன பொதுக்குழு உறுப்பினர்கள், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட இருக்கின்றனர். இது பற்றியும், தமிழக அரசியல் சூழ்நிலை பற்றியும் முகுல் வாஸ்னிக்கிடம் பேசினேன். தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படாமல் விடுபட்ட முக்கியஸ்தர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.



சட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்புக்கு ஆதரவு அளித்ததாக விஜயதரணி எம்.எல்.ஏ. மீதான புகார் பழைய கதை. ஜெயலலிதா பற்றி அவர் தனது அபிப்பிராயத்தையும், ராகுல் காந்தியை பாராட்டியும் குறிப்பிட்டதாக சொன்னார். அவர் பேசியது ஊடகங்களில் சர்ச்சை ஆனதால் ராகுல் காந்தி கவனத்துக்கு கொண்டு சென்றேன். விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அளவுக்கு ஏதும் இல்லை.

அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. குஷ்பு மீதான பிரச்சினையும் அப்படித்தான். ஜெயலலிதா பட திறப்பு விழாவை காங்கிரஸ் புறக்கணிக்கும் என்று அறிவித்தோம். அதன்படி விஜயதரணி அதில் கலந்து கொள்ளவில்லை.

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பிரதமர் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் தமிழகத்துக்கு திட்டங்கள் அறிவித்தால் நன்றாக இருக்கும். 22-ந் தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் காவிரி தண்ணீரை பெறுவது பற்றி உரிய அழுத்தம் தருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.  #tamilnews
Tags:    

Similar News