செய்திகள்
நிரவ் மோடிக்கு சொந்தமான நகைக்கடைகளில் ரூ.7 கோடி தங்கம், வைர நகைகள் பிடிபட்டது
வங்கி மோசடி புகாரையடுத்து கொல்கத்தாவில் நிரவ் மோடிக்கு சொந்தமான கீதாஞ்சலி நகைக்கடைகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய ரூ.7 கோடி தங்கம், வைர நகைகள் சிக்கியது. #niravmodi #Gitanjalijewellery
கொல்கத்தா:
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பாக நிரவ் மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால் மற்றும் வர்த்தக கூட்டாளியும், கீதாஞ்சலி நகைக்கடை குழும அதிகாரியுமான மெகுல் சோக்ஷி மீதும் வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் கொடுத்தது.
அவர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து நாடு முழுவதும் கீதாஞ்சலி குழுமத்துக்கு சொந்தமான 20 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், பெங்களூரு, ஐதராபாத், லக்னோ உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள கீதாஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான 35 நகைக்கடைகளில் பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், மும்பை வோர்லி பகுதியில் உள்ள நிரவ் மோடி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இவற்றில் கொல்கத்தா நகரில் உள்ள ஜாதவ்பூர், கஸ்பா, சால்ட் லேக், நியூ டவுன் மற்றும் எல்ஜின் ரோடு ஆகிய நகைக்கடைகளில் கடந்த 24 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் மட்டும் சுமார் 7 கோடி ரூபாய் அளவிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மாலை தெரிவித்துள்ளனர். #tamilnews #niravmodi #Gitanjalijewellery