செய்திகள்

போராட்டம் நடத்த வந்த சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி கைது

Published On 2018-02-18 07:27 GMT   |   Update On 2018-02-18 07:27 GMT
கூலித்தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கக்கோரி தலித் போராளி பானுபாய் வங்கர் தற்கொலை செய்து கொண்டதற்கு மாநில அரசே காரணம் என பந்த் அறிவித்திருந்த சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டுள்ளார். #JigneshMevani
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் பத்தன் மாவட்டத்தைச் சேர்த்த தலித் சமூகத்தைச் சேர்ந்த நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிலம் வழங்குவதாக அறிவித்தது. அதன்படி ரெம்பன் மற்றும் ராம்பாய் கிராமங்களைச் சேர்ந்த சில தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால், அறிவிப்பு வெளியான போதிலும், அதனை சட்டபூர்வமாக அவர்கள் பெயரில் பத்திரம் பதிவு செய்து வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த தலித் சமூக போராளி பானுபாய் வங்கர் என்பவர், மற்றவர்களை ஒருங்கிணைத்து இதற்கான முயற்சியை மேற்கொண்டார்.

ஆனால், நாட்கள் நகர்ந்தாலும் தலித் மக்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக வங்கர் அறிவித்தார். அதன்படி பிப்ரவரி 15ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்யை ஊற்றிக்கொண்டு வெங்கர் தீக்குளித்தார்.

போலீஸார் விரைந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மற்ற தலித் விவசாயிகளையும் கைது செய்து பின்னர் விடுவித்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வங்கர் மேல் சிகிச்சைக்காக அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். அவர் மரணத்திற்கு பா.ஜ.க அரசுதான் காரணம் என கூறிய சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி இன்று அகமதாபாத் நகரில் பந்த் அறிவித்ததோடு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறியிருந்தார். இந்நிலையில், இன்று காலை போராட்ட களத்திற்கு வந்து கொண்டிருக்கும் போதே தடுத்து நிறுத்தப்பட்ட மேவானி கைது செய்யப்பட்டார். அவருடன் 25-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். #JigneshMevani #TamilNews
Tags:    

Similar News