செய்திகள்
பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவரை விடுவிக்கக்கோரி தேசியக்கொடியுடன் ஊர்வலம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலையும் செய்த வழக்கில் கைதானவரை விடுவிக்ககோரி தேசியக்கொடியுடன் ஊர்வலம் நடந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ராசனா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் மாயமானார். பின்னர், ஒரு வாரம் கழித்து அங்குள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகள் கடும் குரல் எழுப்பிய நிலையில், இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க முதல்வர் மெகபூபா முப்தி உத்தரவிட்டார். திடீர் திருப்பமாக இவ்வழக்கை விசாரணை செய்த போலீஸ் அதிகாரி தீபக் ஹாஜுரியா இம்மாத தொடக்கத்தில் அதிரடியாக சிறப்பு புலனாய்வுக்குழுவால் கைது செய்யப்பட்டார். மேலும், 18 வயதுக்கு உள்பட்ட ஒருவரும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கைதான அதிகாரியை விடுவிக்கக்கோரி இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு வெள்ளிக்கிழமை அன்று ஜம்மு நகரில் தேசியக்கொடியுடன் ஊர்வலம் நடத்தியுள்ளது. மாநில போலீசார் விசாரணையை சரிவர நடத்தவில்லை எனவும், வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்வம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி, தேசிய கொடியுடன் ஊர்வலம் சென்றுள்ளது பயத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் படியே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். #TamilNews