செய்திகள்

மேகாலயத்துக்கு புதிய காங்கிரஸ் தலைவர் நியமனம்: ராகுல்காந்தி நடவடிக்கை

Published On 2017-12-31 05:15 GMT   |   Update On 2017-12-31 05:15 GMT
மேகாலயத்தில் 5 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக புதிய காங்கிரஸ் தலைவரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நியமித்துள்ளார்.

புதுடெல்லி:

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முகுல் சங்மா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர். இது தவிர வேறு 3 எம்.எல்.ஏ.க்களும் பதவி விலகினர். இந்த 8 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதா கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சியில் வருகிற 4-ந் தேதி இணைகிறார்கள்.

மாநில காங்கிரஸ் தலைவர் டி.டி.லபாங் சொல்படிதான் முகுல் சங்மா ஆட்சியை நடத்துவதாக பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

5 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேகாலயா மாநில காங்கிரஸ் தலைவர் லபாங் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மந்திரியாக இருக்கும் செலஸ்டின் லின்டாங் மேகாலயா மாநில புதிய காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்த லபாங் ஆலோசகராகவும், செயல் தலைவராக ஷில்லாங் தொகுதி எம்.பி. வின்சென்ட் பாலாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேகாலயாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதை கருத்தில் கொண்டும், 5 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாகவும் ராகுல்காந்தி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

Tags:    

Similar News