செய்திகள்
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்
பஞ்சாப்பில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதியை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தின் அஜ்னாலா பகுதி இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று இரவில் ரோந்து சென்றனர்.
அப்போது சுமார் 65 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவன் எல்லையை கடந்து வருவதை படைவீரர்கள் கண்டனர். அவர்களது எச்சரிக்கையை மீறி எல்லையில் ஊடுருவ முயன்ற அவனை, எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் அஜ்னாலா எல்லையில் ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.