செய்திகள்

பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை பல மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு

Published On 2017-12-11 11:13 GMT   |   Update On 2017-12-11 11:13 GMT
மராட்டிய மாநிலம் அந்தேரியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர்.
மும்பை:

மராட்டிய மாநிலம் அந்தேரி பகுதியில் நேற்று காலை முதல் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்தது. அப்பகுதியில் உள்ள செர்-இ-பஞ்சாப் காலணியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பல மணி நேரமாக சிறுத்தையை பிடிக்க முயன்றனர்.

சிறுத்தை தாக்கியதால் பெண் ஒருவர் காயமடைந்ததால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் அப்பகுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் சிறுத்தை அப்பகுதியில் உள்ள குழந்தைகள் பள்ளிக்குள் நுழைந்தது. அதனை சிசிடிவி மூலம் பார்த்த போலீசார் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் இணைந்து 12 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுத்தையை பிடித்தனர்.

சிறுத்தையை சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மக்கள் வசிக்கும் பகுதியில் சிறுத்தை புகுந்தது அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News