செய்திகள்

கிரிக்கெட் வீரர் பும்ராவின் தாத்தா ஆற்றில் சடலமாக மீட்பு: தற்கொலையா? என விசாரணை

Published On 2017-12-10 14:16 GMT   |   Update On 2017-12-10 14:17 GMT
குஜராத் மாநிலத்தில் ஓடும் சபர்மதி ஆற்றில் கிரிக்கெட் வீரர் பும்ராவின் தாத்தா உடலை போலீசார் இன்று மீட்டுள்ளனர். இது தற்கொலையாக இருக்கலாம் எனற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகமதாபாத்:

இந்திய அணியில் இடம் பிடித்துள்ள கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரீத் பும்ரா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். வேகப்பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கி ஆல் ரவுண்டராக விளையாடி வரும் இவர், அடுத்த மாதம் தொடங்கவுள்ள தென் ஆப்ரிக்காவுடனான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வஸ்த்ராபூர் பகுதியில் பும்ராவின் குடும்பத்தினர் வசிக்கின்றனர். பும்ராவை பார்ப்பதற்காக அவரது தாத்தா சண்டோக் சிங் பும்ரா (84), கடந்த 1-ம் தேதி உத்தரகாண்டில் இருந்து வஸ்த்ராபூருக்கு வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சண்டோக் பும்ரா, அதன்பின் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது மருமகள் வஸ்த்ராபூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதுதொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், சபர்மதி ஆற்றின் கரையில் முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று ஒதுங்கியுள்ளதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். விசாரணையில் அந்த சடலம் பும்ராவின் தாத்தா என தெரிய வந்தது.

போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News