செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் துணிகரம்: வங்கி ஏ.டி.எம். மெஷினை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

Published On 2017-11-22 06:05 GMT   |   Update On 2017-11-22 06:05 GMT
தெற்கு காஷ்மீரில் உள்ள ஜம்மு-காஷ்மீர் வங்கியின் ஏ.டி.எம். கண்ணாடியை உடைத்து மெஷினை கொள்ளையர்கள் தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகர்:

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ஜம்மு காஷ்மீர் வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் வங்கி ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம் கொள்ளை போயுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சோபியான் மாவட்டத்தில் உள்ள ஜம்மு-காஷ்மீர் வங்கி ஏ.டி.எம்.-க்கு நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் ஏ.டி.எம் கண்ணாடியை உடைத்துள்ளனர். அதன்பின்னர், அவர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் பணத்தை எடுக்க முடியாத நிலையில், அவர்கள் அங்கிருந்த ஏ.டி.எம். இயந்திரத்தையே தூக்கி சென்றுள்ளனர்.

தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஏ.டி.எம். மையத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவுசெய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். அவர்கள் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News