செய்திகள்

ராகுல் காந்தி தலைவராக வந்தால் காங்கிரஸ் பிடியில் இருந்து நாடு விடுபடும்: யோகி ஆதித்யாநாத் கிண்டல்

Published On 2017-11-21 14:40 GMT   |   Update On 2017-11-21 14:40 GMT
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டால் அக்கட்சியின் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்கும் பா.ஜ.க.வின் நோக்கம் எளிதாக நிறைவேறிவிடும் என உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார்.
லக்னோ:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. சோனியா காந்தி தற்போது வகித்துவரும் அப்பதவியில் ராகுல் காந்தியை அமர்த்த வேண்டும் என அக்கட்சியினர் இடையே பரவலான கருத்தொற்றுமை நிலவி வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைமை பதவிக்கான தேர்தல் தொடர்பாக எழும்பிவரும் செய்திகள் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டால் அக்கட்சியின் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்கும் பா.ஜ.க.வின் நோக்கம் எளிதாக நிறைவேறிவிடும் என கூறியுள்ளார்.



கோரக்பூர் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பதில் அளித்த யோகி ஆதித்யாநாத், காங்கிரஸ் கட்சியை பரம்பரை வாரிசுகளின் தலைமை கொண்ட கட்சி என்று குற்றம்சாட்டினார். அந்த கட்சியில் சோனியா காந்தியை தொடர்ந்து ராகுல் காந்தி தலைவர் ஆவதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை என தெரிவித்த அவர் இதுதொடர்பாக இவ்வளவு பெரிய கூக்குரல் தேவையா? என்றும் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டால் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரசின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிப்போம் என மோடி எழுப்பிய முழக்கம் வெகு சுலபமாக நிறைவேறி விடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News