செய்திகள்
இந்தியா - ஏசியன் மாநாடு: பிரதமர் மோடி 12-ம் தேதி பிலிப்பைன்ஸ் பயணம்
பிலிப்பைன்சில் நடைபெறவுள்ள இந்தியா - ஏசியன் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 12-ம் தேதி அங்கு பயணம் செல்கிறார் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 25-வது இந்தியா - ஏசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக, வரும் 12-ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா செல்கிறார். அங்கு நடைபெறும் ஏசியான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் உரை நிகழ்த்துகிறார்.
அப்போது கிழக்கு ஆசிய நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். கிழக்கு ஆசிய நாடுகள் மத்தியில் அமெரிக்காவும், சீனாவும் தங்களது வர்த்தகத்தையும், ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறது. அதற்கு இணையாக இந்தியாவும் தனது நல்லுறவை பலப்படுத்தி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பிரதமர் மோடி 36 ஆண்டுகளுக்குப் பிறகு பிலிப்பைன்ஸ் செல்லும் இந்திய பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது 1981-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் சென்றிருந்தார். அதன்பிறகு எந்த பிரதமரும் அங்கு செல்லவில்லை.