செய்திகள்

டிச. 18-ந்தேதிக்குள் ஆஜராகாவிட்டால் தேடப்படும் குற்றவாளியாக மல்லையா அறிவிக்கப்படுவார்: டெல்லி கோர்ட்டு

Published On 2017-11-08 08:13 GMT   |   Update On 2017-11-08 08:41 GMT
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா டிசம்பர் 18-ம் தேதிக்குள் ஆஜராகாவிட்டால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்கவில்லை.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வங்கிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். அங்கிருந்து அவரை பிடித்து கொண்டு வரும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே விஜய் மல்லையா மீது டெல்லி ஐகோர்ட்டில் பெரா வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. கிங்பி‌ஷர் நிறுவனத்தின் லோகோவை பயன்படுத்த 2 லட்சம் டாலர் தொகை ரிசர்வ் வங்கி முன் அனுமதி பெறாமல் கை மாறியது தொடர்பாக இந்த வழக்கு நடந்து வருகிறது.

அமலாக்கத் துறையினர் பல தடவை வலியுறுத்தியும் இந்த வழக்கு விசாரணைக்கு மல்லையா வரவில்லை. டெல்லி கோர்ட்டு சம்மன் அனுப்பியும் பதில் இல்லை.



இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் இன்று இது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் புதிய மனு தாக்கல் செய்தது. அதில் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து மல்லையா அடுத்த மாதம் (டிசம்பர்) 18-ந்தேதிக்குள் ஆஜராக வேண்டும். இல்லையெனில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்று நீதிபதி அறிவித்தார்.
Tags:    

Similar News