search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "culprit"

    தேவகோட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளியை உடனடியாக கைது செய்யக் கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவகங்கை:

    தேவகோட்டையில் கடந்த 26–ந்தேதி இரவு பிரபு (வயது 28) என்ற வாலிபர் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்குபதிவு செய்து 8 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான ஜெயராமன் மகன் பிரகாஷ், சின்னத்தம்பி மகன் முத்துக்குமார் ஆகியோர் தலைமறைவானார்கள். இவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், முத்துக்குமார் திருச்சி கோர்ட்டில் சரணடைந்தார்.

    முக்கிய குற்றவாளியான பிரகாஷ் என்பவர் இதுவரை தலைமறைவாக இருக்கிறார். இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 1,150 பேர் நேற்று கலெக்டர் ஜெயகாந்தனை சந்திக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததாக கூறினர். அதற்கு போலீசார் மறுத்ததும், அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களில் 10 பேரை மட்டும் கலெக்டரை சந்திக்க அனுப்பி வைத்தனர். மற்ற அனைவரையும் போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே அனுப்பினர்.

    இந்தநிலையில் வெளியே இருந்தவர்கள் திடீரென்று அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாலிபரை கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். அதைதொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கலெக்டரை சந்தித்து விட்டு வெளியில் வந்தவர்கள், தங்களுடன் வந்தவர்களை காணாததால் அதிர்ச்சியடைந்தனர். அதில் கலெக்டரை சந்திக்க சென்ற 2 பெண்கள் தங்கள் விட்டு சென்ற கைக்குழந்தைகளை காணவில்லை என்று பதறினர். உடனே அங்கிருந்த போலீசார் அனைவரும் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்றனர்.

    இது குறித்து கலெக்டரிடம் சென்று முறையிட்டனர். இதையடுத்து கலெக்டர் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    காட்டுமன்னார்கோவில் அருகே முன்விரோத தகராறில் பெணணை குத்திக்கொலை செய்த குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஈச்சம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் தவசீலன். இவரது மனைவி வெற்றிச்செல்வி (வயது 46).

    இவருக்கும், தவசீலனின் தம்பி சதாசிவத்துக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் வெற்றிச் செல்வி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதாசிவம், வெற்றிச்செல்வியை ஆபாசமாக திட்டினார்.

    சதாசிவத்திடம் ஏன் என்னை திட்டுகிறீர்கள்? என்று வெற்றி செல்வி கேட்டார். இதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதாசிவம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெற்றிச்செல்வியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த வெற்றி செல்வி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சதாசிவம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    அக்கம் பக்கத்தினர் வெற்றி செல்வியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வெற்றி செல்வி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து காட்டு மன்னார்கோவில் போலீசில் வெற்றிச்செல்வியின் மகன் கிருபாநிதி புகார் செய்தார். அதன் பேரில் சதாசிவம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் உத்தரவின் பேரில் குற்றவாளியை பிடிக்க காட்டு மன்னார்கோவில் இன்ஸ் பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சதா சிவத்தை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    சேலத்தில் சிறுமியை கற்பழித்து கொன்ற குற்றவாளியை மனநிலை சரியில்லாதவர் என சித்தரிப்பதாக முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

    சேலத்தில் 13 வயது சிறுமி ராஜலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தலையை துண்டித்த அரக்கனை குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளாமல் மனநிலை சரியில்லாதவர் என்று சித்தரிப்பதாக தெரிகிறது.

    முதல்-அமைச்சர் மாவட்டத்தில் கொடுங்குற்றத்திற்கு நீதி வழங்கும் லட்சணம் இதுதானா? இரும்புக் கரத்தால் அடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
    தமிழகத்தையே உலுக்கிய கோவை குண்டுவெடிப்பு வழக்கில், 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஒருவரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். #CoimbatoreBlast
    சென்னை:

    தமிழகத்தையே உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு சம்பவம், கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அன்று நடந்தது. கோவையில் 11 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் பரிதாபமாக பலியானார்கள். 200 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோர்ட்டால் அறிவிக்கப்பட்ட நூகு என்ற ரஷீத் (வயது 44). என்பவர் தலைமறைவாகி விட்டார். கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த இவர் கத்தார் நாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டார். இவரை கோர்ட்டு தலைமறைவு குற்றவாளியாக அறிவித்திருந்தது.

    சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு தனிப்படை போலீசார் இவரைத் தேடி வந்தனர். அனைத்து விமான நிலையங்களிலும், இவரைப்பற்றி புகைப்படத்துடன் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் நூகு என்ற ரஷீத் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதமன் தலைமையில், போலீஸ் படையினர் சென்னை விமான நிலையத்தில் மாறுவேடத்தில் காத்திருந்தனர்.

    அப்போது கத்தார் நாட்டில் இருந்து விமானத்தில் வந்து இறங்கிய நூகு என்ற ரஷீத்தை மாறுவேடத்தில் காத்திருந்த போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    சென்னையில் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.  #CoimbatoreBlast
    அல்பேனியாவில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 உறவினர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வாலிபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #Albania
    டிரானா:

    ஐரோப்பாவின் பால்கன் தீவுகளில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்று அல்பேனியா. இந்த நாட்டின் தலைநகராக விளங்குவது டிரானா. இந்த நகரில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரெசுலஜ் கிராமத்தை சேர்ந்தவர் ரித்வான் சைகாஜ் (24).

    இவர் நேற்று  2 குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அதன்பின், அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த திடீர் தாக்குதலில் அவர்கள் 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், 8 பேரின் உடல்களை கைப்பற்றி இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    இதற்கிடையில் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த படுகொலை தொடர்பான தகவலை வெளியிட்ட ரித்வான் சைகாஜ், முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என அலபாமா பிரதமர் எடி ராமா-வுக்கு சவால் விட்டிருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்தது.

    இந்நிலையில், தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கொலையாளி பதுங்கி இருந்த இடத்தை இன்று சுற்றி வளைத்த போலீசார், ரித்வான் சைகாஜ்-ஐ கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொல்லப்பட்ட உறவினர்கள் தன் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி சந்தேக கண்ணோட்டத்துடன் நடத்தி வந்ததால் ஆவேசத்தில் அவர்கள் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு தீர்த்துக் கட்டிவிட்டதாக பிடிபட்ட ரித்வான் சைகாஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #Albania
    பாகிஸ்தானின் கில்கிட்-பல்ட்டிஸ்தானில் பகுதியில் பெண்கள் பள்ளிகளை எரித்த முக்கிய குற்றவாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பெண்களுக்கு கல்வியறிவு கூடாது என்று வாதிடும் பழமைவாதிகள் அதிகம் உள்ளனர். இவர்களில் பலர் பயங்கரவாதிகளாகவும் மாறி மாணவிகள் மீதும் பெண்கள் பயிலும் பள்ளிக்கூடங்களின் மீதும் தாக்குதலில் நடத்தி வருகின்றனர்.

    இந்த பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பி உயிர் பிழைத்த மலாலா யூசுப் சாய், பாகிஸ்தான் நாட்டில் பெண் கல்விக்கு எதிராக நடைபெற்றுவரும் சமூக அநீதியை உலகத்துக்கு தோலுரித்து காட்டினார்.

    இந்நிலையில்,  கில்கிட்-பல்டிஸ்தான் பகுதிக்குட்பட்ட டயாமர் மாவட்டம், சிலாஸ் நகரில் உள்ள 12 பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் தீ வைத்தனர். இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின. தீ வைக்கப்பட்ட பள்ளிகளில் பாதி பள்ளிகள் பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகள் ஆகும்.

    தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பள்ளிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளிகளுக்கு தீ வைத்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினரும் போலீசாரும் தீவிரமாகத் தேடி வந்தனர். நேற்றிரவு டயாமர் மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 தனிப்படை போலீசார் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். டாங்கர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய எதிர்தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார்.

    விடியவிடிய இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பள்ளி தீவைப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஷபீக் என்பவனை போலீசார் சுட்டுக் கொன்றனர். #Pakistanipolice #GilgitBaltistanshoolarson
    உடுமலை அருகே சிறுத்தையை கொன்று தோலை விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை ருத்ரா பாளையத்தல் சிறுத்தை தோல் விற்பனை செய்ய முயன்றதாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தருமத்தம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 37).

    பன்றிமலை அமைதிச் சோலையை சேர்ந்த பாலுசாமி (70) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    அவரிகளிடம் இருந்து 2 வயது சிறுத்தையின் பதப்படுத்தப்பட்ட தோல் பறிமுதல் செய்யப்பட்டது. வேட்டையாடியது யார்? எந்த வனப்பகுதியில் சிறுத்தை கொல்லப்பட்டது.

    தோல் மட்டும் கிடைத்த நிலையில் நகம், பல் உள்ளிட்ட பொருட்கள் என்ன ஆனது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுத்தை தோலை வாங்க முயன்ற நபரை இன்னும் கண்டு பிடிக்கமுடியவில்லை.

    இது குறித்து அமராவதி வனச்சரக அலுவலர் முருகேசன் கூறும்போது, சிறுத்தை தோலை விற்க முயன்ற இருவர் கோர்ட்டு உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சேகர் என்பரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகிறோம் என்றார்.

    சரண் அடைந்த குற்றவாளியை நீதிமன்றத்துக்குள் புகுந்து கைது செய்த தலைமை காவலருக்கு ரூ.500 அபராதம் விதித்து ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    சென்னை:

    கோவை சிங்காநல்லூரில் கொலை வழக்கில் தேடப்பட்ட சந்தோஷ் என்பவர், கடந்த ஏப்ரல் 10-ந்தேதி திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    அப்போது சிங்காநல்லூர் காவல் நிலைய காவலர்கள், நீதிமன்ற அறைக்குள் நுழைந்து, சந்தோஷை கைது செய்தனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்த திருப்பூர் பார் கவுன்சில், சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்பி வைத்தது.

    காவல் துறையினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி, சரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்ய கூடாது என காவல் துறையினருக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன், தலைமை காவலர் ராபர்ட், டிரைவர் வேலன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். 3 பேரும் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர்.

    தலைமை காவலர் தான் கோர்ட்டுக்குள் சென்று கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று தெரியவந்தது. இதையடுத்து தலைமை காவலருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர், டிரைவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.

    நேரில் ஆஜரான காவல் துறை ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேரும் தங்களுடைய செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்தனர்.

    மேலும், நீதிமன்றத்திற்குள் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, நீதிமன்றத்திற்குள் நுழைந்து சந்தோஷை கைது செய்த தலைமை காவலரின் மன்னிப்பை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தார்.
    ×