search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவகோட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்ய கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
    X

    தேவகோட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்ய கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

    தேவகோட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளியை உடனடியாக கைது செய்யக் கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவகங்கை:

    தேவகோட்டையில் கடந்த 26–ந்தேதி இரவு பிரபு (வயது 28) என்ற வாலிபர் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்குபதிவு செய்து 8 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான ஜெயராமன் மகன் பிரகாஷ், சின்னத்தம்பி மகன் முத்துக்குமார் ஆகியோர் தலைமறைவானார்கள். இவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், முத்துக்குமார் திருச்சி கோர்ட்டில் சரணடைந்தார்.

    முக்கிய குற்றவாளியான பிரகாஷ் என்பவர் இதுவரை தலைமறைவாக இருக்கிறார். இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 1,150 பேர் நேற்று கலெக்டர் ஜெயகாந்தனை சந்திக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததாக கூறினர். அதற்கு போலீசார் மறுத்ததும், அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களில் 10 பேரை மட்டும் கலெக்டரை சந்திக்க அனுப்பி வைத்தனர். மற்ற அனைவரையும் போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே அனுப்பினர்.

    இந்தநிலையில் வெளியே இருந்தவர்கள் திடீரென்று அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாலிபரை கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். அதைதொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கலெக்டரை சந்தித்து விட்டு வெளியில் வந்தவர்கள், தங்களுடன் வந்தவர்களை காணாததால் அதிர்ச்சியடைந்தனர். அதில் கலெக்டரை சந்திக்க சென்ற 2 பெண்கள் தங்கள் விட்டு சென்ற கைக்குழந்தைகளை காணவில்லை என்று பதறினர். உடனே அங்கிருந்த போலீசார் அனைவரும் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்றனர்.

    இது குறித்து கலெக்டரிடம் சென்று முறையிட்டனர். இதையடுத்து கலெக்டர் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×