செய்திகள்

குஜராத் வர்த்தகர்கள் மத்தியில் மன்மோகன் சிங் நாளை பிரசாரம்

Published On 2017-11-06 06:21 GMT   |   Update On 2017-11-06 06:21 GMT
குஜராத் மாநில வர்த்தகர்கள் மத்தியில் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. பாதிப்புக்கள் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க உள்ளார்.
புதுடெல்லி:

குஜராத் மாநில சட்டசபைக்கு வருகிற டிசம்பர் மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பிரதமர் மோடியும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் ஏற்கனவே முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டுனர்.

குஜராத் சட்டசபை தேர்தலில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முன் வைத்து காங்கிரஸ் பிரசாரம் மேற்கொள்கிறது. அதற்கு பா.ஜனதாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் பொருளாதார நிபுணரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கை காங்கிரஸ் குஜராத்தில் பிரசார களத்தில் இறக்கிவிட்டுள்ளனர். நாளை அவர் குஜராத் தலைநகர் ஆமதாபாத் செல்கிறார்.

அங்கு வர்த்தகர்கள் கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இதில் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அவர்கள் மத்தியில் விளக்கமாக எடுத்துக் கூறுகிறார். பின்னர் ஆமதாபாத்தில் பத்திரிகையாளர்களையும் சந்தித்து ஜி.எஸ்.டி. பாதிப்பு குறித்து விளக்கி கூறுகிறார்.

இதுதவிர மாநில காங்கிரஸ் சார்பில் ராஜ்கோட், சூரத், ஆமதாபாத் உள்பட 25 இடங்களில் வர்த்தகர்கள் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதிலும் மன்மோகன் சிங் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.

வருகிற 10-ந்தேதி முதல் ராகுல்காந்தி மீண்டும் குஜராத் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
Tags:    

Similar News