search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசாரம்"

    • தற்போது புதுச்சேரியில் தேர்தல் பிரசாரகளம் விறுவிறுப்பை எட்டியுள்ளது.
    • அ.தி.மு.க.வும் தனி அணியாக களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் தமிழ்வேந்தன், மற்றும் நாம் தமிழர் கட்சி உள்பட சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

    தற்போது புதுச்சேரியில் தேர்தல் பிரசாரகளம் விறுவிறுப்பை எட்டியுள்ளது. தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சிறிய சிறிய அமைப்புகளின் ஆதரவை திரட்டும் நடவடிக்கையில் அந்தந்த அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தொகுதி வாரியாக இறங்கியுள்ளனர்.

    பிரதான 2 தேசிய கட்சிகள் இடையே நேரடி போட்டி மட்டுமின்றி அ.தி.மு.க.வும் தனி அணியாக களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மட்டுமின்றி மாநிலத்தின் முன்னணி நிர்வாகிகளையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    தற்போது கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக அனுப்பி சிறிய சிறிய அமைப்புகள், இயக்கங்களின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    வாக்கு வங்கியை அதிகப்படுத்தும் நோக்கில் குறிப்பாக தொழிற்சங்க நிர்வாகிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள், குடியிருப்போர் நலச்சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரிக்குமாறு கேட்டு வருகின்றனர்.

    அப்போது குடியிருப்போர் நலசங்க அமைப்புகளிடம் இருந்து வரும் கோரிக்கைகளை கேட்கும் வேட்பாளர்கள், வெற்றிபெற்றதும் உடனே கோரிக்கையை நிறைவேற் றித் தருவதாக வாக்குறுதி அளித்து வருகின்றனர்.

    இதேபோல் அரசு ஊழியர்கள் சங்கங்கள், கூட்டமைப்புகள், மாணவர்-இளைஞர் அமைப்புகள் உள்ளிட்டோரையும் சந்தித்து வருகின்றனர்.

    முதல்கட்டமாக இந்நடவடிக்கையில் இறங்கியுள்ள பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்ததாக சட்டமன்ற தொகுதி வாரியாக பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்னை அரசியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். அரசியலுக்கு தொடர்பு இல்லாத என் மனைவியை சட்டசபையில் அவமானப்படுத்தினார்கள்.
    • மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரமும், ஆண்டிற்கு 3 கியாஸ் சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது சொந்த தொகுதியான குப்பத்தில் 2 நாட்கள் நேற்று தேர்தல் பிரசாரம் தொடங்கினார். குப்பம் தொகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மகளிர் பிரிவு நிர்வாகிகளை சந்தித்தார்.

    ஜெகன்மோகன் ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. என்னை சட்ட விரோதமாக கைது செய்து துன்புறுத்தினர். இருப்பினும் நான் பயந்து ஓடவில்லை. எனக்கு பதவி முக்கியமில்லை. மாநில நலன் தான் முக்கியம்.

    தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். மாநிலத்தின் நலனை பாதுகாப்பதற்காக தெலுங்கு தேசம், பா.ஜ.க. மற்றும் ஜனசேனா செயல் திட்டம் தீட்டி வருகிறது.

    மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினேன் வக்பு வாரிய சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டன உருது மொழியை 2-வது மொழியாக அறிவித்தேன்.

    ஆந்திராவில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போதையில் இருப்பவர்கள் தாய் யார்? சகோதரி யார்? என தெரியாமல் நடந்து கொள்கின்றனர்.

    அந்திரி நிவா திட்டத்தின் மூலம் குப்பம் பகுதியில் உள்ள கிளை கால்வாய்கள் தூர்வாரப்படும். ஒவ்வொரு ஏக்கர் விவசாய நிலத்திற்கும் பாலாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டியது எனது பொறுப்பு.

    என்னை அரசியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். அரசியலுக்கு தொடர்பு இல்லாத என் மனைவியை சட்டசபையில் அவமானப்படுத்தினார்கள்.

    பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். இதனால் ஆண்கள் நாற்காலிகளை தேட வேண்டும். எனது ஆட்சியில் பெண்களுக்கு சைக்கிள் வழங்கினேன். 30 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு வழங்கினேன்.

    மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரமும், ஆண்டிற்கு 3 கியாஸ் சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும்.

    ஜெகன்மோகன் ஆட்சியில் தரமற்ற மதுபானங்கள் விற்பனை செய்வதால் அதைக் குடித்துவிட்டு கணவன்கள் இறந்து விடுவதால் பெண்கள் தாலி கொடியை இழந்து வருகின்றனர்.

    எனது ஆட்சியில் ரூ.75-க்கு விற்கப்பட்ட மதுபானங்கள் ஜெகன்மோகன் ஆட்சியில் 2 மடங்காக விலை உயர்த்தப்பட்டது. தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த பின்னர் குறைந்த விலையில் தரமான மதுபானங்கள், பீர்கள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    • திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • வேட்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.

     திமுக சார்பில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்.

    நல்லா இருக்கீங்களா? உங்கள் எழுச்சி ஆரவாரம் எனக்கு உற்சாகத்தை தருகிறது. ஏப்ரல் 19-ந் தேதி எப்போது வரும் என நீங்கள் காத்திருக்கிறீர்கள். அதிலும் தாய்மார்கள் முடிவெடுத்துவிட்டால் யார் நினைத்தாலும் அதை மாற்ற முடியாது.

    முதல்அமைச்சர் மு. க.ஸ்டாலின் ஆட்சியின் பயன்கள் பெண்களுக்கு தான் நன்றாக தெரியும். கட்டணம் இல்லாத இலவச பஸ்களை இப்போது பெண்கள் செல்லமாக ஸ்டாலின் பஸ் என சொல்கிறார்கள். ஸ்டாலின் பஸ் வருகிறது என்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

    தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை பெற்றோர் மனமுவந்து பாராட்டி தைரியமா வயக்காட்டு வேலைக்கு போறாங்க. அதே போல் 1.65 கோடி பெண்களுக்கும் நிச்சயம் மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.


    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை என்று சொல்லி நானாவது ஊருக்கு ஊர் செங்கல்லை தூக்கி காட்டுகிறேன். ஆனால் 2019 ஜனவரி 27-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டிய போது மோடியுடன் நின்ற பழனிசாமி ஆட்சி முடிகிற வரைக்கும் அதே மாதிரி தானே பல்லை காட்டி நின்றார்.

    புயல் மழை வெள்ளத்துக்கு தமிழகம் வராத பிரதமர் தேர்தல் ஜுரத்தில் இப்போது தமிழகத்தில் வலம் வருகிறார். பா.ஜ.க. ஆட்சியால் அதானி கொடிதான் பறக்குது. இதற்கெல்லாம் ஏப்ரல் 19 தான் பதில் சொல்லும்.

    இந்தியா கூட்டணி தான் ஆட்சிக்கு வரப்போகுது.பாஜகவை நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை.
    • 400 தொகுதிகளில் வெற்றியா, 450 தொகுதிகளில் வெற்றியா என்பது கேள்வி?

    கோவை:

    கோவை சரவணம்பட்டியில் இன்று நடந்த பா.ஜ.க நிர்வாகிகள் கூட்ட த்தில் பா.ஜ.க. மாநில தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

    நான் வருகிற புதன்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளேன். அடுத்து மாநில தலைவர் என்ற முறையில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களையும் ஆதரித்து 3, 4 நாட்கள் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் தேர்தல் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

    நீங்கள் வேட்பாளராக இருந்தால் எப்படி பணியாற்றுவீர்களோ, அதே போல் பணியாற்ற வேண்டும். அடுத்த 25 நாட்கள் நாம் எப்படி பணியாற்ற போகிறோம் என்பதே வெற்றியை உறுதி செய்யும்.

    கோவையில் நாம் வெற்றியை சுவைத்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. வெவ்வேறு காரணங்களால் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறோம். 20 ஆண்டுகள் ஆனாலும் நமது பழைய பணிகளை மக்கள் போற்றுகின்றனர்.

    2 டிரங்கு பெட்டிகளுடன் 2002-ல் கோவைக்கு படிக்க வந்தேன். கடின உழைப்பிற்கு மரியாதை கொடுக்கும் ஊர் இந்த ஊர். கோவையில் பிறந்து வாழ்ந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டேன். தற்போது தேர்தலில் போட்டியிடுகிறேன். கோவை மீது எனக்கு பாசம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    கோவை எங்களது கோட்டை என்று பலரும் சொல்லி வருகின்றனர். கோட்டையில் ஓட்டை போட நான் வரவில்லை. மக்களின் மனங்களை வெல்லவே வந்துள்ளேன்.

    இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை. மக்களை சந்திப்பது மட்டுமே நமது எண்ணம். டிபன் பாக்ஸ் கொடுத்தோம், வேறு பரிசு பொருட்கள் கொடுத்தோம் என்று வெற்றி பெற வேண்டும் என்பது இல்லை. தேர்தலில் பா.ஜ.க. வென்று மீண்டும் பிரதமராக மோடி வருவார். இதில் 400 தொகுதிகளில் வெற்றியா, 450 தொகுதிகளில் வெற்றியா என்பது கேள்வி?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே புதுச்சேரியில் வெயில் அதிகரித்து வந்தது.
    • இந்த சூழ்நிலையில் பிரசாரம் தொடங்கினால் என்ன ஆகிறது என அனைத்து கட்சியின் தொண்டர்களும் சோர்வில் உள்ளனர்.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. கடந்த 20-ந் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டது.

    பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

    தேர்தல் பணியில் இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் அ.தி.மு.க.,வினர் தேர்தல் பணியை தொடங்கி கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    இதனால் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    புதுச்சேரியில் வழக்கமாக ஏப்ரல், மே மாதம் கோடை வெயில் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே புதுச்சேரியில் வெயில் அதிகரித்து வந்தது.

    தற்போது வெயில் அதிக அளவில் வாட்டி வதைத்து வருகிறது. காலை 10 மணிக்கே வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது.

    போக்குவரத்து சிக்னலில் கூட 5 நிமிடம் நிற்க முடியாத அளவுக்கு வெயில் உள்ளது. பிரசாரம் செய்யும் காலமும் குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில் பிரசாரம் தொடங்கினால் என்ன ஆகிறது என அனைத்து கட்சியின் தொண்டர்களும் சோர்வில் உள்ளனர்.

    • பாரதிய ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.
    • நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி, வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. பாரதிய ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில் பிரசார களத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் சார்பிலும் பங்கேற்க இருக்கும் பட்டியல் மற்றும் பிரசாரம் செய்யும் இடங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

    தி.மு.க. சார்பில் நடிகர்கள் வாகை சந்திரசேகர், பெஞ்சமின், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட் உள்பட பல நடிகர்கள் பிரசாரத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் சிங்கமுத்து, வையாபுரி, விந்தியா, நாஞ்சில் அன்பழகன், கவுதமி, காயத்ரி ரகுராம், அனுமோகன், பபிதா, ஜெயமணி ஆகியோர் பிராசரம் செய்ய தயாராக இருக்கின்றனர். நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    பிரசாரம் பற்றி சிங்கமுத்துவிடம் கேட்டபோது, கட்சி சார்பில் பிரசாரம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அறிவிப்பு வெளியான பின்தான் யார்-யார் எங்கு பிரசாரம் செய்ய உள்ளார்கள் என்ற விபரம் தெரியவரும். தேர்தல் அறிக்கை மற்றும் பல்வேறு விசயங்கள் மற்றும் விமர்சனங்கள் தேர்தல் பிரசார களத்தில் பேச இருக்கிறோம்.

    கட்சியின் அறிவிப்பு வெளியிட்டவுடன் எங்களது பிரசார பணிகள் தொடங்கும் என கூறினார்.

    பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக நடிகைகள் குஷ்பு, நமீதா, ரஞ்சனா நாச்சியார் உள்பட பலர் பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.

    • மார்ச் 31ம் தேதி வரையிலான முதற்கட்ட பிரசார பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • மார்ச் 24ம் தேதி மாலை 4 மணிக்கு திருச்சியில் பிரசாரம் செய்கிறார்.

    7 கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவை தேர்தல் முதற்கட்டமாகவும், ஒரே கட்டமாகவும் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி அன்று நடைபெறுகிறது.

    பெரும்பாலான கட்சிகள் தங்களின் கூட்டணியை முடிவு செய்துள்ள நிலையில், பிரசாரத்தையும் தொடங்கியுள்ளன.

    இந்நிலையில், அதிமுக வரும் மார்ச் 31ம் தேதி வரையிலான முதற்கட்ட பிரசார பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, மார்ச் 24ம் தேதி மக்களவை தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார்.

    மார்ச் 24ம் தேதி மாலை 4 மணிக்கு திருச்சியில் பிரசாரம் செய்கிறார்.

    மார்ச் 26ம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடியிலும், அன்று இரவு 7 மணிக்கு திருநெல்வேலியிலும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    மார்ச் 27ம் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியிலும், இரவு 7 மணிக்கு தென்காசி (தனி), 28ம் தேதி விருதுநகர், ராமநாதபுரத்திலும் பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து, 29ம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கி தர வேண்டும்
    • நாங்கள் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கிறோம்.

    சென்னை:

    தி.மு.க-தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

    பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கி தர வேண்டும் என்கிற வேண்டுகோளை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவிடம் வைத்து உள்ளேன். அதற்கான நியாயமான காரணங்களையும் எடுத்து வைத்திருக்கிறேன்.

    கடந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான இடங்களுக்கு சென்று பிரசார பீரங்கியாக இருந்து இந்த மாபெரும் வெற்றி கூட்டணியில் நானும் ஒரு சிறு பங்காற்றி இருக்கிறேன்.

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் குரல் தமிழக மக்களுக்காக சட்டமன்றத்தில் எப்படி ஓங்கி ஒலிக்கிறதோ அதேபோல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்கிற எனது விருப்பத்தையும், கட்சியின் பொதுக்குழு தீர்மானத்தையும் தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் ஒப்படைத்திருக்கிறேன். அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து சென்று நல்ல பதிலை தருகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்கள். எனவே தி.மு.க. கூட்டணியில் ஒரு இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளேன். இந்த சந்திப்பு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிற சந்திப்பாக இருந்தது.

    நாங்கள் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கிறோம். இதுவரை நடந்த தேர்தல்களில் நான் காங்கிரஸ் மேடைகளில் ஏறி பிரசாரம் செய்தது இல்லை. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் செய்ய மாட்டேன்.

    தி.மு.க. கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் எங்கள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும். நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன். எனது கட்சி நிர்வாகிகளில் ஒருவருக்கு போட்டியிடும் வாய்ப்பை கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுச்சேரி திரையரங்குகளிலும் கழு மரம் படம் வெளியாகிறது.
    • பொது மக்கள் பழங்கால நினைவுகளை அசைபோட்டபடி ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

    புதுச்சேரி:

    60 ஆண்டுகளுக்கு முன்பு புதிய படங்கள் திரையங்குகளுக்கு வரும்போது பெரிய அளவில் விளம்பரம் செய்யாமல் ஆட்டோ, ரிக்ஷா, மற்றும் மாட்டு வண்டிகளில் போஸ்டர்களை ஒட்டி, துண்டு பிரசுரங்களை கொடுத்து விளம்பரம் செய்வார்கள்.

    அதேபோன்று அந்த கால சினிமா விளம்பரங்களை நினைவு கூறும் வகையில் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் இன்று கழு மரம் பட குழுவினர் மாட்டு வண்டியில் போஸ்டர்களை ஒட்டி கூம்பு வடிவ குழாய் ஒலிபெருக்கியில் மைக் செட் போட்டு அனைவரையும் படம் பார்க்க கூவி கூவி அழைத்தனர்.

    யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் கொட்டாச்சி இயக்கி நடிக்கும் கழு மரம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. புதுச்சேரி திரையரங்குகளிலும் கழு மரம் படம் வெளியாகிறது.


    புதுச்சேரி வீதிகளிலும் மாட்டு வண்டிகளில் சென்று துண்டு பிரசுரம் வழங்கியும், ஒலி பெருக்கி மூலமும் படம் பார்க்க வருமாறு அழைப்பு விடுத்தனர்.

    சினிமா போஸ்டர் ஒட்டிய மாட்டு வண்டி வீதி வீதியாக செல்லும்போது அதைப் பார்த்த பொது மக்கள் பழங்கால நினைவுகளை அசைபோட்டபடி ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

    • எந்த வடிவத்திலும் குழந்தைகளை பிரசாரத்தில் பயன்படுத்த வேண்டாம்.
    • விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களின்போது குழந்தைகளை பயன்படுத்த தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டு உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    அரசியல் பிரசார மேடைகளில் குழந்தைகளை பேசவைப்பது, முழக்கமிட வைப்பது, துண்டு பிரசுரங்களை விநியோகிக்க வைப்பது உள்ளிட்ட எந்த ஒரு செயலிலும் குழந்தைகளை ஈடுபட வைக்க கூடாது.

    எந்த வடிவத்திலும் குழந்தைகளை பிரசாரத்தில் பயன்படுத்த வேண்டாம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலின் போது, எந்தவொரு தேர்தல் பிரசாரத்திலும் குழந்தைகளை ஈடுபடுத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்.

    கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் தேர்தலின் போது குழந்தைகளை எந்த விதத்திலும் பயன்படுத்துவதில் பூஜ்ஜிய தன்மையை உறுதிபடுத்த வேண்டும்.

    குழந்தைகளை தங்கள் கைகளில் வைத்திருப்பது, சுமப்பது உட்பட எந்த வகையிலும் ஈடுபடுத்தக்கூடாது. வாகனத்தில் அல்லது பேரணியில், கவிதை, பாடல், பேச்சுக்களில் குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது.

    வேட்பாளரின் சின்னங்களை காட்சிப்படுத்துதல், அரசியல் பிரசாரத்தின் சாயலை உருவாக்க குழந்தைகளை பயன்படுத்த தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் சட்டங்கள் மற்றும் தேர்தல் வழிகாட்டுதல்களுடன் கண்டிப்பாக இதை உறுதிசெய்ய வேண்டும்.

    இந்த விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.
    • ஆந்திர மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முதல் மந்திரி சித்தராமையா மற்றும் மந்திரிகள் பிரசாரம் செய்தனர்.

    இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.

    இந்த தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களை பிரசாரத்தில் இறக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

    இது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதால் வெற்றி வாய்ப்பு உள்ளது.

    இதனால் ஆந்திர மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளோம் என தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் தெலுங்கானா வி.ஐ.பி.க்கள் மதிக்கப்படவில்லை. சிபாரிசு கடிதங்கள் அதிகாரிகளால் மறுக்கப்படுகிறது. இதுகுறித்து விவாதம் நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

    • பா.ஜ.கவுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ள சந்திரசேகரராவ் கட்சி அரசை தூக்கி எறியுங்கள்.
    • மக்கள் காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டது.

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரசாரம் செய்தார்.

    அப்போது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு பாடல் பாடினார். அதில் வருவது போல் தெலுங்கானாவில் ரகசிய தொடர்பு உள்ளது என கூறினார்.

    தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க, சந்திரசேகரராவின் பிஆர்எஸ் மற்றும் ஒவைசி கட்சிகள் ஒரு கூட்டணியாக செயல்பட்டு வருகின்றன.

    நாட்டு நாட்டு பாடலைப் போல் அவர்களுக்குள் ரகசிய தொடர்பு உள்ளது. நாட்டு நாட்டு பாடலை ரசியுங்கள். ஆனால் பா.ஜ.கவுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ள சந்திரசேகரராவ் கட்சி அரசை தூக்கி எறியுங்கள்.

    பாராளுமன்றத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்களில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக சந்திரசேகர ராவ் கட்சி செயல்பட்டுள்ளது. அந்த கட்சிகள் இடையே ரகசிய கூட்டணி உள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    சந்திரசேகர ராவ் கட்சி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்களை எந்த விசாரணை அமைப்பும் விசாரிக்க பிரதமர் அனுமதிக்க மாட்டார். மேலும் தெலுங்கானாவில் நடைபெறும் ஊழல்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் பேசமாட்டார்.

    அதே நேரத்தில் தவறுகள் எதுவும் செய்யாத காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிற எதிர்க்கட்சியினர் மீது விசாரணை அமைப்புகளை பிரதமர் ஏவி விடுவார், ரகசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியைச் சேர்ந்த அசாதுதீன் ஒவைசி வட மாநிலங்கள் வரை வந்து தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவார்.

    ஆனால் தெலுங்கானாவில் 19 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடமாட்டார் .

    ஏனென்றால் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சியை ஆதரிக்கிறார் .நீங்கள் அந்த 3 கட்சிகளில் எதற்கு வாக்களித்தாலும் அவர்கள் தங்களை பலப்படுத்திக் கொள்வார்கள்.

    எனவே மக்கள் காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது.

    அவரால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியவில்லை.

    அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்காக அரசியல் அதிகாரத்தை பெறுவது பகிர்ந்து அளிப்பதில் தான் அவரது கவனம் உள்ளது.

    இனி அவர்களுக்கு ஓய்வு கொடுங்கள் மாநிலத்திற்கு நன்மை வேண்டுமென்றால் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்களியுங்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம்.

    மேலும் தெலுங்கானா போராட்டத்தின் போது உயிரிழந்த குடும்பத்தினர் ஒருவருக்கு வேலை வழங்குவோம். மக்களுக்காக அளித்த வாக்குகளை நிறைவேற்ற காங்கிரஸ் தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×