செய்திகள்

மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் நடவடிக்கை இல்லை: மத்திய அரசு

Published On 2017-11-03 08:56 GMT   |   Update On 2017-11-03 08:57 GMT
மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தவர்கள் வைத்திருக்கும் பணத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தவர்கள் வைத்திருக்கும் பணத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, செல்லாத நோட்டுகளை மாற்றுவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட கால அவகாசத்தில் ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலாதவர்களுக்கு அரசு மறுவாய்ப்பு தரவில்லை.

ரூபாய் நோட்டுகளை மாற்ற மேலும் அவகாசம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த மனு மீதான விசாரணையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன், செல்லாத நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு மேலும் அவகாசம் வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட 14 மனுக்களை மொத்தமாக சேர்த்து அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா அமர்வு தெரிவித்தது.

ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அவகாசம் கோரி மனுதாக்கல் செய்தவர்கள் மீது மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தற்காக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News