செய்திகள்

பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலகம் மீது தாக்குதல்: ஹர்திக் பட்டேலை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு

Published On 2017-10-25 23:47 GMT   |   Update On 2017-10-25 23:47 GMT
பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலகம் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக ஹர்திக் பட்டேல் உள்ளிட்டோரை ஜாமீனில் வெளிவர முடியாத விதத்தில் கைது செய்யும்படி கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
காந்திநகர்:

குஜராத் மாநிலத்தில் 2015-ம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கோரி பதிதார் அனாமத் அந்தோலன் சமிதி(பாஸ்) அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விஸ்நகர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வான ரிஷிகேஷ் பட்டேலின் அலுவலகத்தை பாஸ் அமைப்பின் தலைவர் ஹர்திக் பட்டேல் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சூறையாடியதாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஹர்திக் பட்டேல், சர்தார் பட்டேல் குழுவின் அமைப்பாளர் லால்ஜி பட்டேல் மற்றும் 6 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை விஸ்நகர் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஹர்திக் பட்டேல் உள்ளிட்ட அனைவரும் விசாரணைக்காக ஆஜராகும்படி ஏற்கனவே கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அவர்கள் ஆஜர் ஆகாததால் கோர்ட்டு அக்டோபர் 25-ந்தேதி(நேற்று) கட்டாயம் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தது. ஆனால் நேற்றும் அவர்கள் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இதையடுத்து, ஹர்திக் பட்டேல் உள்ளிட்டோரை ஜாமீனில் வெளிவர முடியாத விதத்தில் கைது செய்யும்படி கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக ஹர்திக் பட்டேல் ஆஜராவதில் இருந்து ஒரு நாள் மட்டும் விலக்கு அளிக்குமாறு அவருடைய வக்கீல்கள் வைத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். 
Tags:    

Similar News