செய்திகள்

எனது மகனுக்கு பல கணக்குகள் இருப்பதாக கூறுவது பொய்: சி.பி.ஐ. புகாருக்கு ப.சிதம்பரம் மறுப்பு

Published On 2017-09-24 07:29 GMT   |   Update On 2017-09-24 07:29 GMT
எனது மகனுக்கு வெளிநாட்டு வங்கியில் பல கணக்குகள் இருப்பதாக சி.பி.ஐ கூறும் பொய் உண்மையாகி விடாது என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவருக்கு ஒரு வெளிநாட்டு வங்கியில் பல கணக்குகள் இருப்பதாகவும், அவற்றின் மூலம் பண பரிவர்த்தனைகள் மேற்கொண்டு வருவதாகவும், கடந்த முறை இங்கிலாந்து சென்ற போது அந்த வங்கி கணக்குகளை மூட முயற்சி செய்ததாகவும் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்து இருந்தது.

இதற்கு மத்திய மந்திரி ப.சிதம்பரம் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சி.பி.ஐ. கூறும் பொய் உண்மையாகி விடாது. எனது மகனுக்கு (கார்த்தி சிதம்பரத்துக்கு) வெளிநாட்டு வங்கியில் பல கணக்குகள் எதுவும் கிடையாது. எனது குடும்பத்திற்கோ, எனக்கோ வெளிநாடுகளில் கணக்கில் வராத சொத்து இல்லை என ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன்.

சி.பி.ஐ. கூறுவது போல் வெளிநாட்டில் எனது குடும்பத்திற்கு சொத்து இருந்தால் அவற்றை அரசுக்கு எழுதிக் கொடுப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளேன். இது போன்ற செய்திகளுக்கு ஊடகங்கள் முன்னுரிமை அளிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News