செய்திகள்
கள்ளச்சாராய சாவுக்கு மரணதண்டனை - உ.பி. அரசு புதிய சட்டம்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தால் அதை தயாரித்தவருக்கு மரண தண்டனை விதிக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பண்டிகை காலங்களின் போது கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. நச்சுத்தன்மை வாய்ந்த இந்த சாராயத்தை பருகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த உயிரிழப்பிற்கு காரணமான சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, கள்ளச்சாராயம் பருகி எவரேனும் நிரந்தர ஊனமடைந்தாலோ அல்லது மரணமடைந்தாலோ அதை தயாரித்தவருக்கு 10 லட்ச ரூபாய் அபராதமோ அல்லது மரணதண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். இந்த தண்டனை தொடர்பான விதிகள், ஏற்கனவே உள்ள சட்டத்தில் சேர்க்கப்படும்.