செய்திகள்

ரூ.1,200 கோடி ஊழலுக்கு ஆதாரம்: நிதிஷ்குமாருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு - லல்லுபிரசாத் அறிவிப்பு

Published On 2017-09-13 11:33 GMT   |   Update On 2017-09-13 11:33 GMT
ஊழலில் நிதிஷ்குமார், சுசில்குமார் ஆகியோருக்கு உள்ள தொடர்பு குறித்து ஆதாரங்கள் இருப்பதாக லல்லுபிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

பாட்னா:

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

பீகார் மாநிலம் பாகல் பூரில் ஸ்ரீஜன் மகிளா விகாஸ் சயோக் சமிதி என்ற என்.ஜி.ஓ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது பெண்களுக்கு தொழில் முறை பயிற்சி வழங்குவதாகும்.

இந்த அமைப்பு அரசு நலத்திட்டங்களுக்கான நிதியை பாகல்பூர் மாவட்ட நிர்வாகத்தின் வங்கி கணக்குகளில் இருந்து முறைகேடாக எடுத்துள்ளதாக புகார் எழுந்தன. ரூ.1200 கோடி அளவில் ஊழல் நடந்தது தெரிய வந்தது. இந்த ஊழலில் தொடர் புடைய 6 பேர் இறந்ததால் இது பரபரப்பு ஆனது.

ஸ்ரீஜன் தொண்டு நிறுவனம் மூலம் மாநில அரசு ரூ.1200 கோடி ஊழல் செய்ததாகவும் இதற்கு பொறுப் பேற்று முதல்மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்மந்திரி சுசில்குமார் மோடி பதவி விலக வேண்டும் என்றும் லல்லு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம் குற்றம் சாட்டி இருந்தது.

இதை தொடர்ந்து இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நிதிஷ்குமார் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் ஸ்ரீஜன் ஊழலில் நிதிஷ்குமார், சுசில்குமார் ஆகியோருக்கு உள்ள தொடர்பு குறித்து ஆதாரங்கள் இருப்பதாக லல்லுபிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி ஆகியோர் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

ஸ்ரீஜன் ஊழல் பற்றி முதல்மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்மந்திரி சுசில் குமார் ஆகியோருக்கு எல்லாம் தெரியும். பணத்தை தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்க அனுமதி அளித்து உள்ளனர். இதற்கு போதுமான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன.

இந்த ஊழல் தொடர்பாக நாங்கள் விரைவில் பாட்னா ஐகோர்ட் அல்லது சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம். கோர்ட்டின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற வேண்டும். சி.பி.ஐ. இந்த வழக்கை சரியான முறையில் விசாரிக்காது. இதனால் நாங்கள் கோர்ட்டு மூலம் விசாரணையை கோர உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News