செய்திகள்

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு தொடர்பான வழக்கு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்

Published On 2017-08-21 22:16 GMT   |   Update On 2017-08-21 22:16 GMT
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு தொடர்பான வழக்கு குறித்து பதில் அளிக்க கோரி மத்திய அரசு, போலீஸ், தேசிய தேர்வு வாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:

மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் (தேசிய தகுதி நுழைவுத்தேர்வு) நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை குறித்து, ஆனந்த் ராய் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அவர் தனது மனுவில், இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்றும், எனவே கோர்ட்டின் கண்காணிப்பில் சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இந்த மனு ஐகோர்ட்டின் தற்காலிய தலைமை நீதிபதி கீதா மிட்டல், ஸ்ரீ ஹரிசங்கர் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க கோரி மத்திய அரசு, போலீஸ், தேசிய தேர்வு வாரியம், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் சி.பி.ஐ.க்கும், இந்த நுழைவுத்தேர்வு பணி தொடர்பான ஒப்பந்தத்தை பெற்று இருந்த தனியார் நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அத்துடன் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
Tags:    

Similar News