செய்திகள்

பீகார்: நிதிஷ்குமார், சரத் யாதவ் ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம்

Published On 2017-08-19 04:59 GMT   |   Update On 2017-08-19 04:59 GMT
பீகார் மாநிலம் பாட்னாவில், நிதிஷ்குமார் மற்றும் சரத் யாதவ் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைக்கப்பட்டது. இதில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்தார்.

லாலு பிரசாத்தின் குடும்பத்தினர் மீது சி.பி.ஐ., ஊழல் புகார் வழக்குப்பதிவு செய்ததையடுத்து, லாலுவின் மகனும், துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி பதவி விலகவேண்டும் என பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

தேஜஸ்வி பதவி விலக மறுத்ததால், நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து, நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். அவரது முடிவுக்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களில் ஒருவரான சரத் யாதவ் அதிருப்தி தெரிவித்தார்.



இதற்கிடையே, எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் சரத் யாதவ் ஈடுபட்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை சரத் யாதவ் நடத்தினார்.

இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் நிதிஷ்குமார் மற்றும் சரத் யாதவ் ஆகியோர் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.

இதனால் பாட்னா நகரம் முழுவதிலும் நிதிஷ்குமார் ஆதரவாளர்களும், சரத் யாதவ் ஆதரவாளர்களும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களால் பாட்னாவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News