செய்திகள்

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கில் மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2017-08-18 21:23 GMT   |   Update On 2017-08-18 21:23 GMT
கொளத்தூர் சட்டசபை தொகுதி தேர்தல் தொடர்பாக சைதை துரைசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி:

தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமி போட்டியிட்டார். இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலின் போது தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக மு.க.ஸ்டாலின் செலவு செய்ததுடன், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய சைதை துரைசாமி, எனவே கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சைதை துரைசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சைதை துரைசாமி தரப்பில் சென்னை வக்கீல் ஜெயந்த் முத்ராஜ் ஆஜரானார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், இதில் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் மீதான விசாரணையை அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News