செய்திகள்

நீட் தேர்வில் ஓராண்டு விலக்கு: தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆதரவு

Published On 2017-08-16 08:59 GMT   |   Update On 2017-08-16 08:59 GMT
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட முன்வரைவுக்கு ஆதரவாக மத்திய அரசின் வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளதால் நாளைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:

அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவு தேர்வில் (நீட்) தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க கோரி அவசர சட்ட முன்வடிவை தமிழக அரசு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த சட்ட முன்வடிவு தொடர்பாக அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபாலிடம் மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது.

இன்று பிற்பகல் கிடைத்த தகவல்களின்படி தமிழக அரசின் சட்ட முன்வரைவை ஆதரித்து மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கே.கே.வேணுகோபால் குறிப்பு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று மாலை அல்லது நாளைக்குள் நீட் தேர்வில் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும். இந்த முடிவு தமிழக அரசு கோரிக்கைக்கு சாதகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



பின்னர், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அவசர சட்டத்தை அனுப்பி வைக்கும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் தமிழக மாணவ-மாணவிகளுக்கு கல்வியாண்டு 2017-2018-ல்  நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News