செய்திகள்
மகன் திருமணத்தில் பங்கேற்க மதானி போலீஸ் காவலுடன் அழைத்துச் செல்லப்பட்ட காட்சி

கேரளாவில் மத மோதல்களை உருவாக்கி கம்யூ. ஆட்சியை கலைக்க சதி: மதானி குற்றச்சாட்டு

Published On 2017-08-10 06:36 GMT   |   Update On 2017-08-10 06:36 GMT
கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி நல்ல முறையில் நடக்கிறது. இதைப் பொறுத்தக்கொள்ள முடியாத சிலர் மத மோதல்களை உருவாக்கி ஆட்சியை கலைக்க முயற்சி செய்கிறார்கள் என மதானி குற்றச்சாட்டி உள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரளாவைச் சேர்ந்தவர் அப்துல் நாசர் மதானி. பி.டி.பி. கட்சியின் தலைவரான இவர், பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு அங்கு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

மதானியின் மகன் உமர் முக்தார் திருமணம் கொச்சி அருகே தலச்சேரியில் நேற்று நடைபெற்றது. மகனின் திருமணத்தில் பங்கேற்பதற்காக மதானிக்கு ஒரு வாரம் பரோல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதானி கொச்சி அழைத்து வரப்பட்டுள்ளார்.

அவரது பரோல் இன்றுடன் நிறைவடைகிறது. இதை தொடர்ந்து இன்று பகல் அவரை மீண்டும் பலத்த பாதுகாப்புடன் போலீசார் விமானம் மூலம் பெங்களூர் கொண்டு செல்ல உள்ளனர்.

மகன் திருமணத்தில் பங்கேற்ற பிறகு மதானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கேரளாவில் மத பிரச்சினைகளை தூண்டி விட பல இயக்கங்கள் தீர்மானித்துள்ளன. இங்கு கம்யூனிஸ்டு ஆட்சி நல்ல முறையில் நடக்கிறது. இதைப் பொறுத்தக்கொள்ள முடியாத சிலர் மத மோதல்களை உருவாக்கி ஆட்சியை கலைக்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் அது பலிக்காது.

கம்யூனிஸ்டு ஆட்சிக்கு பொதுமக்கள் ஆதரவு உள்ளது. இந்த ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே ஆட்சியை கலைக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News