செய்திகள்

வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்: துபாய் நிறுவன பெண் இயக்குனரின் அமலாக்கத்துறை காவல் மேலும் நீட்டிப்பு

Published On 2017-07-26 12:24 GMT   |   Update On 2017-07-26 12:24 GMT
வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட துபாய் நிறுவன பெண் இயக்குனரின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்கு இங்கிலாந்தில் உள்ள அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க 2010-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.3600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை, கடந்த 17-ம் தேதி துபாயைச் சேர்ந்த யு.எச்.ஒய். மற்றும் மேட்ரிக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களின் பெண் இயக்குனர் ஷிவானி சக்சேனாவை கைது செய்தது. சென்னையில் கைது செய்யப்பட்ட அவரை டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணைக் காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்த காவல் நீட்டிப்பு இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து ஷிவானி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஷிவானியிடம் மேலும் பல்வேறு ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. இதனையடுத்து, ஷிவானியின் விசாரணைக் காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Tags:    

Similar News