செய்திகள்
ஐதராபாத்: போதைபொருள் கடத்திய ஒரு இந்திய பெண், 5 நைஜீரியர்கள் கைது
போதைபொருள் மற்றும் மனித கடத்தல்களில் ஈடுபட்ட ஒரு இந்திய பெண் மற்றும் ஐந்து நைஜீரியர்களை ஐதராபாத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்:
போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில மாதங்களாக ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடத்தி வந்த தேடுதல் வேட்டையில், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட டீலர்களை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஐதராபாத்தின் எல்.பி. நகர் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திடமான நிலையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடமும், ஒரு நைஜீரியாவைச் சேர்ந்தவரிடமும் சோதனை நடத்தினர். அவர்களிடமிருந்து 3 கிராம் கொக்கைன் மற்றும் 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த பெண் விஜயவாடா பகுதியை சேர்ந்த சங்கீதா ஆவார். அவரது நெருக்கமான நண்பர் மூலமாக நைஜீரிய போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் பந்தல்குடா பகுதியில் தனியாக ஒரு வீடு எடுத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சங்கீதா அளித்த தகவலின் பெயரில் அவர்களின் கூட்டாளிகளான நான்கு நைஜீரியர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 கிராம் கொக்கைன், 12 கிராம் பிரவுன் சுகர், 1.6 கிலோ கஞ்சா, 39 கிராம் மதிப்பிலான வேறு போதை மாத்திரைகள் மற்றும் இரண்டு லட்ச ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்ட்டவர்களில் இருவர் மாணவர்கள். மற்ற மூவரும் தங்கள் வீசா காலாவதியான பின்னரும் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். அதிலும் ஒருவர் வீசா காலாவதியான பின்னரும் சட்டவிரோதமாக தங்கிய குற்றத்திற்காக ஏற்கனவே கோவாவில் சிறைதண்டனை அனுபவித்துள்ளார் எனவும் போலீசார் கூறியுள்ளனர். இவர்கள் ஒரு கிராம் கொக்கைன் மற்றும் பிரவுன் சுகரை 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்துவந்ததும், மனிதர்களை கடத்தி பணம்பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.