செய்திகள்

இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராக இன்று பதவியேற்கிறார் ராம்நாத் கோவிந்த்

Published On 2017-07-25 03:48 GMT   |   Update On 2017-07-25 03:48 GMT
நாட்டின் 14-வது குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் பதவியேற்க உள்ளார். இன்று நடைபெறும் விழாவில் அவருக்கு உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி கெஹார் பதவிபிரமாணம் செய்து வைக்கிறார்.

புதுடெல்லி:

இந்திய குடியரசுத்தலைவராக இருந்த பிரணாப் முக்கர்ஜியின் பதவிகாலம் நிறைவடைந்ததையடுத்து அடுத்த குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஆளுங்கட்சி சார்பாக ராம்நாத் கோவிந்தும், அவரை எதிர்த்து முன்னாள் சபாநாயகரான மீராகுமாரும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து, இந்தியாவின் 14-வது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவிற்காக பாராளுமன்ற மையமண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குடியரசுத்தலைவர் வசிப்பிடமான ராஸ்டிரபதி பவனில் இருந்து முழு அரசு மரியாடையுடன் பாராளுமன்ற மையவளாகம் வரை அவர் அழைத்துவரப்பட இருக்கிறார். 

அதைத்தொடர்ந்து இன்று மதியம் 12:15 மணியளவில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி கெஹார், ராம்நாத் கோவிந்திற்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். பதவிபிரமாணம் முடிந்த பின்னர் 21 குண்டுகள் முழங்க அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட உள்ளது.

இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திரசிங் மோடி, துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி உட்பட அனைத்து மாநில முதல்வர்களும், ஆளுநர்களும், மத்திய அமைச்சர்களும் கலந்துகொள்கின்றனர். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர்கள், கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.
Tags:    

Similar News