செய்திகள்

பஞ்சாபில் போதை மருந்து கடத்தலில் முன்னாள் மந்திரி- மகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Published On 2017-07-13 10:28 GMT   |   Update On 2017-07-13 10:28 GMT
பஞ்சாபில் போதை மருந்து கடத்தல் வழக்கில் முன்னாள் மந்திரி-மகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பாட்டியாலா:

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தான் எல்லை வழியாக பல ஆண்டுகளாக போதை மருந்து கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தது. கடந்த அகாலி தளம் ஆட்சியின் போதும் போதை மருந்து கடத்தல் பெருமளவில் நீடித்தது.

இதையடுத்து மாநில போலீசாருடன் இணைந்து மத்திய அமலாக்கத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ரூ.6,000 கோடி அளவுக்கு போதை மருந்து கடத்தலில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடந்ததை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. அர்ஜூனா விருது பெற்ற பளுதூக்கும் வீரரும் முன்னாள் போலீஸ் அதிகாரியுமான ஜெகதீஷ் போலா தலைமையில் கடத்தல் கும்பல் செயல்பட்டது.

இதில் அடுத்தடுத்து பல முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டனர். அகாலி தள ஆட்சியின் போது மந்திரியாக இருந்த ஸ்வரண்சிங் பில்லார், அவரது மகன் தமன்வீர் சட்டமன்ற முன்னாள் முதன்மை செயலாளர் அவினாஷ் சந்தர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதுபற்றி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பாட்டியாலா கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் முன்னாள் மந்திரி ஸ்வரண் சிங் பில்லார், அவரது மகன் தமன்வீர், அதிகாரி அவினாஷ் சந்தர் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
Tags:    

Similar News